மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத் இயக்கம், தீவிரவாத இயக்கம் கிடையாதாம்.. சொல்கிறது பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் : இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத் இயக்கம், தீவிரவாத இயக்கம் கிடையாது என்று பாகிஸ்தான் அறிவித்து உள்ளது.
166 பேரை கொன்று குவித்த மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர்களில் ஒருவர், ஹபீஸ் சயீத். இவர் ஜமாத் உத் தவா என்ற தீவிரவாத இயக்கத்தை நடத்தி வருகிறார்.இந்த இயக்கம் தீவிரவாத இயக்கம் என ஐ.நா. சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தலைக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.65 கோடி விலையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் பாகிஸ்தானில் சர்வசாதாரணமாக நடமாடி வருகிறார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் அரசு, தீவிரவாத இயக்கங்களை பட்டியலிட்டு உள்ளது. 60 இயக்கங்களை கொண்ட பட்டியலில் இந்த ஜமாத் உத் தவா இல்லை. இதேபோன்று அல்கொய்தா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய ஹக்கானி வலை சமூகமும் தீவிரவாத இயக்க பட்டியலில் இடம்பெறவில்லை.
உலகின் அதி தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கம், பட்டியலில் 39-வது இடத்திலும், மற்றொரு தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் இ முகமது 29-வது இடத்திலும் உள்ளன.
இந்த பட்டியலில் அல்கொய்தா, பாகிஸ்தான் தலீபான் உள்ளிட்ட இயக்கங்களும் இடம் பிடித்துள்ளன. ஜமாத் உத் தாவாவும், ஹக்கானி வலை சமூகமும் பட்டியலில் இடம்பெறாதது, உலக அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானுக்கு தீவிரவாத ஒழிப்புக்காக அமெரிக்கா கூட்டணி ஆதரவு நிதி என்ற பெயரில் நிதி வழங்கி வருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில், தலீபான் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்து செயல்படுகிற ஹக்கானி வலை சமூகம் என்ற தீவிரவாத இயக்கத்தினை ஒடுக்குவதற்கு பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹக்கானி தீவிரவாத இயக்கத்தின் தற்போதைய தலைவர் சிராஜூதீன் ஹக்கானி, சமீபத்தில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் துணைத்தலைவராக பதவி ஏற்றிருப்பது நினைவுகூரத்தக்கது.
இதனால் பாகிஸ்தானுக்கு அமெரிக்காவின் தீவிரவாத ஒழிப்பு நிதி தொடர்ந்து கிடைக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications