மெக்கா விபத்து.. பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்வு... மொத்த உயிரிழப்பு 769 ஆக அதிகரிப்பு
மெக்கா : திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 769 ஆக அதிகரித்துள்ளது என சவுதி அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் புனித யாத்திரையின் முக்கிய நிகழ்வான சாத்தான் மீது கல் எறியும் சடங்கு மெக்கா அருகே உள்ள மினா நகரில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பல லட்சம் யாத்ரீகர்கள் ஒரே இடத்தில் திரண்டபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர்.

விழுந்தவர்கள் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருந்ததால் பலர் மூச்சுத் திணறியும், கால்களில் மிதிபட்டும் இறந்தனர். நேற்று வரை 717 பேர் பலியான நிலையில், மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்ட பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது.
இந்நிலையில், இன்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி மேலும் 52 பேர் இறந்ததையடுத்து, பலி எண்ணிக்கை 769 ஆக அதிகரித்துள்ளதாகவும், 936 பேர் காயமடைந்ததாகவும் சவுதிஅரேபியாவின் சுகாதார துறை அமைச்சர் காலித் அல்-பாலிஹ் தெரிவித்துள்ளார். மேலும் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
இந்த துயர சம்பவத்துக்கு சவுதிஅரேபியா அரசின் பாதுகாப்பு குளறுபடியே காரணம் என ஈரான் குற்றம்சாட்டி வருகிறது. மேலும் இதை சர்வதேச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் எனவும் ஈரான் தெரிவித்துள்ளது.
மெக்கா நெரிசலில் சிக்கி ஈரானைச் சேர்ந்த 136 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications