ஹமாஸுக்கு பலத்த அடி..யஹ்யா சின்வரின் இறுதி நொடி! தீரனாக கொண்டாடும் மக்கள்..இஸ்ரேலின் மிக பெரும் தவறு
பெய்ரூட்: இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் உச்சபட்ச தலைவரான யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அவரது கடைசி நிமிட வீடியோக்களை வெளியிட்டு இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் இடையே நீண்ட நாட்களாக போர் நடைபெற்று வரும் நிலையில் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக பல அமைப்புகளும் நாடுகளும் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் கடந்த சில நாட்களாகவே மத்திய கிழக்கு நாடுகளை போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது.

ஹமாஸ் தொடங்கி இஸ்ரேலுக்கு எதிராக, லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹவுத்தி, ஈரான் உள்ளிட்டவை தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் பலமுனை தாக்குதல்களை நடத்த வேண்டிய நிலை இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து நடத்தப்பட்ட பேஜர் தாக்குதலில் ஏரளாமனோர் பலியாயினர்.
இந்நிலையில் இஸ்ரேல் தான் இந்த தாக்குதலுக்கு காரணம் என ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் ஹிஸ்புல்லா மீது தாக்குதலை தொடங்கியது. போர் விமானங்கள், ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளிட்டவை மூலம் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் 1000-க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படுகிறது.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் முக்கிய திருப்பம் ஏற்பட்டிருக்கிறது. தெற்கு காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் உச்சபட்ச தலைவரான யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
தெற்கு காசாவில் ஒரு கட்டிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும், அதில் ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வரும் ஒருவர் என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தான் இந்த சின்வர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹமாச அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்பின் தலைமையை ஏற்ற சின்வர் இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் சின்வர் கொல்லப்பட்ட வீடியோவை பகிர்ந்துள்ள பெஞ்சமின் நெதன்யாகு, சாத்தானுக்கு பெரிய அடியை இஸ்ரேல் கொடுத்துள்ளது.. எங்கள் இலக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. பணய கைதிகளை முழுமையாக மீட்கும் வரை ஓய மாட்டோம்” எனக் கூறியிருந்தார். இந்த நிலையில் சின்வர் கொல்லப்பட்ட வீடியோ உலக அளவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமிய போராளிகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஹமாஸ் சமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சின்வரின் இறுதி தருணங்களை இஸ்ரேல் வெளியிட்டது தவறு என கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரபல திரைப்பட இயக்குனரான டான் கோஹன் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சின்வர் குவியே அணிந்து தனது இறுதிக் கடமையை ஆற்றும் போது உயிரிழந்துள்ளார். மேலும் கடைசி நொடியில் கூட தன்னை வீடியோ எடுத்த ட்ரோன் மீது குச்சியை எரிந்து சியோனிய ஆக்கிரமிப்புக்கு எதிரான தனது கடைசி எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இது சின்வரை சிலரது பார்வையில் போராட்டத்தின் சின்னமாக மாற்றி இருக்கிறது. அவர் வீர மரணம் அடைந்ததாகவும் மக்கள் கூறி வருகின்றனர்” என கூறியுள்ளார்.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின், சின்வர் தனது பாதுகாவலர்களுடன் காசாவில் சுரங்கங்களில் பதுங்கி இருப்பதாகவும், இஸ்ரேலில் இருந்து பிடித்து வைக்கப்பட்ட பணய கைதிகளை மனிதக் கேடயமாக பயன்படுத்தி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். இந்த நிலையில் இஸ்ரேல் வெளியிட்ட சின்வரின் வீடியோவில் அவருக்கு பாதுகாவலர்கள் என யாருமே தனியாக இல்லை. மேலும் பணய கைதிகள் யாருமே இல்லை. இதன் காரணமாக நெதன்யாவின் குற்றச்சாட்டு பொய்யானது என தெரிய வந்திருக்கிறது.
மேலும் இஸ்ரேல் தனது எதிரியை தற்போது தீர்த்து கட்டி இருந்தாலும், இந்த போராட்டம் இன்னும் முடிவடையவில்லை. சின்வரின் மரணம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் போர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications