இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் தலைவர் பலி! போரை முடிவுக்கு கொண்டுவருகிறார் நெதன்யாகு?
காசா: பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் கடந்த ஓராண்டாக தீவிர சண்டை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று நடந்த சண்டையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை இஸ்ரேல் உறுதி செய்து வருகிறது.
ஏற்கெனவே ஹமாஸின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை ஈரானில் வைத்து இஸ்ரேல் போட்டு தள்ளியது. இந்நிலையில், தற்போது அதன் தலைவராக இருந்த யஹ்யா சின்வாரையும் இஸ்ரேல் ராணுவம் கொலை செய்திருக்கிறது. இன்று காலை காசாவில் இஸ்ரேல் ராணுவத்திற்கும், ஹமாஸ் படையினருக்கும் நேரடி சண்டை நடந்தது. ஒரு கட்டிடத்தில் இருந்து ஹமாஸ் படையை சேர்ந்த 3 பேர் இஸ்ரேல் வீரர்களை நோக்கி தாக்குதல் நடத்தினர்.

அந்த கட்டிடத்தின் மீது குண்டு வீசப்பட்ட நிலையில் மூவரும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காண சென்றபோதுதான், அது யஹ்யா சின்வார் என்பது தெரிய வந்திருக்கிறது. அடையாளர் அவரை போன்றே இருப்பினும், யஹ்யா சின்வாரின் சடலம்தானா என்பதை அறிய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த சோதனைக்கு பிறகே தகவல்கள் உறுதி செய்யப்படும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து ஹமாஸ் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒருவேளை உயிரிழந்தது யஹ்யா சின்வாராக இருப்பின், இந்த போர் முடிவுக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஹமாஸ் தலைவரை கொல்வதுதான் இஸ்ரேலின் நோக்கம் என அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னணி: இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஜெர்மன் தாக்குதலிலிருந்து அடைக்கலம் தேதி யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு வந்தனர். அங்கு அவர்களுக்காக இஸ்ரேல் எனும் நாடு உருவாக்கப்பட்டது. ஆனால், அதற்கான பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியை அமெரிக்காவும், பிரிட்டனும் எடுத்து கொடுத்தது. இது பாலஸ்தீன மக்களிடையே அதிருப்தி உருவாக முதல் காரணம். அடுத்தடுத்த நாட்களில் பாலஸ்தீனத்திற்கும், இஸ்ரேலுக்கும் தகறாரு தொடங்க.. அமெரிக்கா இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்தது.
அமெரிக்காவின் ஆயுத உதவி மூலம் பாலஸ்தீனத்தை பெரும் அளவில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க, அதை எதிர்த்து ஆயுதம் ஏந்திய பாலஸ்தீன விடுதலை குழுக்கள் உருவாகின. இப்படி உருவானதுதான் ஹமாஸ். ஹமாஸ் அமைப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுக்க, பதிலுக்கு இஸ்ரேல் போரை தொடங்கியது. இது இப்போது வரை நீண்டு வருகிறது. ஹமாஸை அழிப்பதாக கூறி ஆயிரக்கணக்கான அப்பாவி பொது மக்களை இஸ்ரேல் கொன்று குவித்து வருகிறது.
சில தினங்களுக்கு முன்னர் ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் கொல்லப்பட்ட நிலையில், தற்போது அந்த அமைப்பின் பெரும் தலைவராக கருதப்படும் யஹ்யா சின்வாரும் உயிரிழந்துள்ளார். இப்போதாவது இஸ்ரேல் போரை நிறுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் தங்கள் எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications