காசாவை மீண்டும் கண்ட்ரோலில் எடுக்கும் ஹமாஸ்? உற்று பார்க்கும் இஸ்ரேல்! போர் நின்ற உடனே பரபரப்பு
காசா: இஸ்ரேலுக்கும் காசாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக நீடித்த போர் ஒரு வழியாகச் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இது உலக நாடுகளுக்கு ஒரு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இருப்பினும், போர் சமயத்தில் அழிவின் விளிம்பில் இருந்த ஹமாஸ் படை, போர் முடிவுக்கு வந்த சில நாட்களில் ஒட்டுமொத்த காசா பகுதியையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதலை நடத்தியது. அதுவே மத்திய கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு பிறகே ஹமாஸ் மீது போரை ஆரம்பித்த இஸ்ரேல், ஹமாஸை முழுமையாக ஒழிக்கும் வரை போரைத் தொடரப் போவதாகத் திட்டவட்டமாக அறிவித்தார்.
இஸ்ரேல் ஹமாஸ் தாக்குதல்:
ஓராண்டிற்கு மேலாகக் காசா பகுதியில் இஸ்ரேல் சரமாரியாகத் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த அமைப்பின் பல டாப் அதிகாரிகள் குறிவைத்துக் கொல்லப்பட்டனர். இதனால் ஹமாஸ் கிட்டத்தட்ட முழுமையாக அழிக்கப்படும் ஒரு சூழல் உருவானது. ஆனால் இப்போது போர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் காசாவை ஹமாஸ் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரத் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் ஹமாஸ் மூன்று இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவித்தபோது இது தெளிவாகவே தெரிந்தது. பணயக்கைதிகளை விடுவிக்கும் போது, ஹமாஸ் படைகள் அவர்களைச் சுற்றி வளைத்து இருந்தனர். சில ஹமாஸ் படைகள் கொண்டாட்டத்திலும் கூட ஈடுபட்டு இருந்தனர்.
வல்லுநர்கள் சொல்வது என்ன:
இது தொடர்பாக மத்திய கிழக்கு போர் குறித்துப் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் தயான் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் மைக்கேல் மில்ஷ்டீன் கூறுகையில், "காசாவில் மீண்டும் ஹமாஸ் ஒரு வலிமையான சக்தியாகத் திரும்ப வருகிறார்கள். ஹமாஸ் நிலை இப்போது அவ்வளவு மோசமாக இல்லை. ஆனால், ஹமாஸ் ஒருவேளை காசாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தால் அது நல்லது இல்லை. கிட்டதட்ட அழிவின் விளிம்பில் இருந்த ஒரு அமைப்பு வெறும் சில நாட்களில் ஒட்டுமொத்த காசாவையும் கட்டுக்குள் கொண்டு வருவது நல்லதில்லை" என்றார்.
சரமாரி தாக்குதல்:
ஹமாஸை அழிக்க இஸ்ரேல் கடந்த பல மாதங்களாகவே காசா பகுதியில் சரமாரியாகத் தாக்குதல்களை நடத்தியது. இதில் சுமார் 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். மேலும், காசாவில் உள்ள 90% மக்கள் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறும் சூழல் ஏற்பட்டது. காசா இந்தளவுக்கு மோசமான அழிவைச் சந்தித்த நிலையில், அமெரிக்கா மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகளின் உதவியுடன் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. ஆனால், இந்த போர் நிறுத்தத்தை ஹமாஸ் தனது வெற்றியாகவும் சாதனையாகவும் கருதுகிறது.
கண்ட்ரோலில் எடுக்கும் ஹமாஸ்
போர் நிறுத்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் மீண்டும் பல ஆயிரம் பேரை போலீஸ் வேலைக்கு பணியமர்த்தத் தொடங்கியுள்ளது. மேலும், பள்ளிகளை மீண்டும் திறக்கும் திறக்கவும் திட்டமிட்டுள்ளது. இது குறித்து மைக்கேல் மில்ஷ்டீன் கூறுகையில், "காசாவின் பள்ளிகளைத் திறக்கவுள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது. காசாவில் மிக மோசமான நிலை இருக்கும் போதிலும் ஹமாஸ் அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. காசா பகுதியில் யார் கண்ட்ரோல் என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த அறிவிப்புகள் இருக்கிறது" என்றார்.
காசா பகுதியை மீண்டும் முழுமையாக ஹமாஸ் கண்ட்ரோலில் எடுத்தால்.. அது அந்த பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தையே ஏற்படுத்தும். வரும் காலத்தில் ஹமாஸ் மீண்டும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால் அது பேரழிவையே ஏற்படுத்தும்.












Click it and Unblock the Notifications