பிணைக்கைதிகள் விடுவிப்பதை திடீரென தாமதப்படுத்திய ஹமாஸ்.. இஸ்ரேல் கெடு! மத்தியஸ்தம் செய்த கத்தார்
டெல் அவிவ்: இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்று அமலுக்கு வந்தது. முதற்கட்டமாக 13 பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுவித்தது. ஆனால், இன்று திடீரென பிணைக்கைதிகள் விடுவிப்பதை ஹமாஸ் அமைப்பு தாமதப்படுத்தியது.
இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக மோதல் நீடித்து வருகிறது. குறிப்பாக பாலஸ்தீனத்தின் காசா பகுதியை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றனர். இந்த நிலையில், தான் கடந்த மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதலை முன்னெடுத்தது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல், காசா மீது தாக்குதலை நடத்த தொடங்கியது.

முன்னதாக இஸ்ரேலுக்குள் புகுந்த்ந ஹமாஸ் அமைப்பினர் 250-க்கும் அதிகமானோரை துப்பாக்கி முனையில் கடத்தி காசா பகுதிக்கு இழுத்து சென்றனர். இதில் வெளிநாட்டவர்களும் அடங்குவர். இதன்பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இஸ்ரேலின் மும்முனை தாக்குதலில் காசா நகரம் நிலைகுலைந்துள்ளது. இதற்கிடையே, பிணைகைதிகளை விடுவிக்கவும், பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கவும் தற்காலிகமாக போரை நிறுத்தி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.
பிணைக்கைதிகள் விடுதலை: இதன்படி, கத்தார், எகிப்து, அமெரிக்கா ஆகிய நாடுகளின் மத்தியஸ்தம் செய்தது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே பல வாரங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் 50 பணய கைதிகளை விடுவிக்கவும், அதற்கு ஈடாக 4 நாட்களுக்கு போரை நிறுத்தவும் உடன்பாடு ஏற்பட்டது. போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் நேற்று முதல் கட்டமாக 25 பிணைக்கைதிகளை விடுவித்தது.
இந்த நிலையில், திடீரென பிணைக்கைதிகள் விடுதலை செய்வதை தாமதம் செய்ய ஹமாஸ் முடிவு செய்துள்ளது. ஹமாஸ் இயக்கத்தின் ஆயுத பிரிவான ஹமாஸ் அல் குவாசம் பிரிகேட் இது தொடர்பாக கூறுகையில், பாலஸ்தீனிய சிறைக்கைதிகளை விடுதலை செய்வதில் ஒப்புக்கொண்ட படி இஸ்ரேல் நடந்து கொள்ளவில்லை என்றால் பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவதை தாமதம் செய்வோம் என்று தெரிவித்துள்ளது.
தாமதம் செய்யப்படும்: பிணைக்கைதிகள் இன்று இரவுக்குள் விடுதலை செய்யப்படவில்லை என்றால் காசா மீது ராணுவ நடவடிக்கை தொடரப்படும் என்று இஸ்ரேல் பாதுகாப்புத்துறை வட்டாரங்கள் கூறியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பிணைக்கைதிகள் விடுதலை செய்வதை தாமதம் செய்யப்படும் என ஹமாஸ் கூறிய பிறகு இதுபோன்ற செய்திகள் வெளியாகின.
முன்னதாக, இஸ்ரேலிய ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், கடைசி நிமிடத்தில் ஏதேனும் மாற்றங்கள் இல்லையென்றால், இன்று 13 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் 39 பாலஸ்தீனிய சிறைக்கைதிகள் பதிலுக்கு விடுதலை செய்யப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார். சண்டை நிறுத்த ஒப்பந்தப்படி, 150 பாலஸ்தீனிய சிறைக்கைதிகளுக்கு பதிலாக 50 பேர் பிணைக்கைதிகள் விடுக்கப்படுவார்கள் என்று முடிவு செய்யப்பட்டு இருந்தது. இதன்படி முதல் நாளில் 13 இஸ்ரேலியர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனிடையே, எகிப்து மற்றும் கத்தார் தலையிட்டு மத்தியஸ்தம் செய்த நிலையில், பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கத்தார் கூறுகையில், 8 குழந்தைகள் 5 பெண்கள் உள்பட 13 இஸ்ரேல் பிணைக்கைதிகள் இன்று விடுவிக்கப்படுவார்கள் எனவும் மேலும் 7 வெளிநாட்டவர்களையும் ஹமாஸ் விடுவிக்க உள்ளது" என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications