நீயா.. நானா? இந்தியா மீது குற்றம்சாட்டுவது ஏன்? ஜஸ்டின் ட்ரூடோ பரபர விளக்கம்! காரணம் இதுதான்
ஒட்டாவா: கனடாவில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இந்தியா-கனடா இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இருநாடுகளுக்கும் இடையேயான உறவு பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இந்தியா மீது குற்றம்சாட்டியது ஏன்? என்பது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபர விளக்கமளித்துள்ளார்.
வெளிநாடுகளில் வசித்து வரும் சீக்கியர்கள் இந்தியாவை பிரித்து தனிநாடு வழங்க கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை வைப்பது காலிஸ்தான் தீவிரவாதிகள். இவர்கள் இந்தியாவில் முழுவதுமாக ஒழிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும் வெளிநாடுகளில் இருந்து தனிநாடு கோரிக்கை வைத்து வருகின்றனர். முக்கியமான நாட்களில் வெளிநாடுகளில் உள்ள தூதரங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் செய்கின்றனர். மேலும் இந்திய தேசியக்கொடிக்கு பதில் அவர்களின் கொடியையும் ஏற்றி அத்துமீறி நடந்து கொள்ளும் நிகழ்வுகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில் தான் காலிஸ்தான் புலிகள் படையின் தலைவரும், காலிஸ்தான் பயங்கரவாதியுமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் வசித்து வந்தார். இவர் மீது இந்தியாவில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. இருப்பினும் அவர் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இதனால் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரை கடந்த 2020ம் ஆண்டு இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது.
இதற்கிடையே தான் கடந்த ஜூன் மாதம் கனடாவில் சர்ரேயில் உள்ள குருத்வாரா அருகே அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதில் இந்தியாவின் ஏஜென்சி ஈடுபட்டு இருக்கலாம் என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளதோடு, ஜஸ்டின் ட்ரூடோவை விமர்சனம் செய்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில் இருநாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு உள்ளது.
இந்நிலையில் இந்தியா உடனான தற்போதைய உறவு குறித்த கேள்விக்கு கனடா பிரமதர் ஜஸ்டின் ட்ரூடோ பதிலளித்துள்ளார். இந்தியா-கனடா உறவில் ஏற்பட்டுள்ள விரிசல் விஷயத்தில் கனடாவின் நட்பு நாடுகள் அமைதி காப்பது பற்றி அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஜஸ்டின் ட்ரூடோ கூறியதாவது: இந்தியா என்பது வளர்ந்து வரும் நாடுகளில் முக்கியத்துவம் மிகுந்த நாடாக உள்ளது.
இதனால் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளது. இதில் எந்த சந்தேகமும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட பிராந்தியங்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் இந்தியாவுடன் சேர்ந்து செயல்பட வேண்டி உள்ளது. இருப்பினும் பிரச்சனையை தூண்டிவிடவோ அல்லது சந்தேகத்தை கிளப்பும் வகையிலோ இந்த குற்றச்சாட்டை கூறவில்லை. எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின் அடிப்படையில் தான் தெரிவித்துள்ளோம்.
மேலும் சட்டத்தின் ஆட்சியை கனடாவில் நடத்த வேண்டும் என்ற முக்கியத்துவத்தின் அடிப்படையில் தெரிவித்தோம். அதோடு எங்கள் நாட்டு குடிமக்களை காப்பது எங்களின் பணி. இதில் உறுதியாக இருக்கிறோம். அதோடு இதனை விதிகளுக்கு உட்பட்டு செய்வதில் முனைப்பு காட்டுகிறோம்.
கனடாவில் உள்ள அரசு அதிகாரிகள் உள்பட இந்தியர்கள் அனைவரும் எங்களின் குடிமகன்கள் தான். அதனால் தான் இந்த விஷயத்தில் உண்மையை கண்டறியும் வகையில் எங்களுடன் சேர்ந்து செயல்பட வேண்டும் என இந்தியாவை அழைக்கிறோம். ஜி20 மாநாட்டில் கூட பிரதமர் மோடியிடம் இதுபற்றி நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசியிருந்தேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications