ஆப்கனில் கடும் பனிப்பொழிவு... குளிர் தாங்க முடியாமல் 27 குழந்தைகள் பலியான பரிதாபம்
காபூல்: ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் இதுவரை 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறது. குண்டு வெடிப்புகளிலும் துப்பாக்கிச் சூடுகளிலும் மக்கள் மடிந்து வருகின்றனர்.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். இதனால் அவசரத்துக்கு கூட வெளியே போக முடியாமல் மக்கள் முடங்கி வருகின்றனர்.
மிக அதிக பனிப்பொழிவு
இந்நிலையில் இயற்கையும் தன்பங்குக்கு ஆப்கானிஸ்தானை சீர்குலைத்து வருகிறது. தற்போது ஜாவ்ஸ்ஜான் மாகாணத்தில் மிக அதிகமான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
உறைய வைக்கும் குளிர்
இதனால் கடுமையான குளிரும் நிலவி வருகிறது. உறைய வைக்கும் குளிரால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
தாக்குப்பிடிக்க முடியாமல் திணறல்
வயதானவர்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் குளிரை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். பல அடி உயரத்துக்கு குவிந்துக் கிடக்கும் பனியால் மக்கள் வெளியே வரமுடியாமல் முடங்கிக்கின்றன.
மைனஸில் வெப்ப நிலை
வீடுகளுக்குள்ளேயே நெருப்பை மூட்டி அவர்கள குளிரை தவிர்த்து வருகின்றனர். தார்ஜாப் மாவட்டத்தில் வெப்பநிலை மைனஸில் உள்ளதால் அப்பகுதி மக்கள் குளிரால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
27 குழந்தைகள் பலி
அம்மாவட்டத்தில் இதுவரை 27 குழந்தைகள் குளிரை சமாளிக்க முடியாமல் பலியாகியுள்ளனர். இதனால் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பல அடி உயரத்துக்கு பனி
சாலைகள் முழுவதும் பனியால் மூடப்பட்டுள்ளதால் போக்குவரத்தும் தடை பட்டுள்ளது.
இதனால் சுகாதர மையங்களுக்கு கூட போக முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.
உறைந்த தண்ணீர்
தண்ணீரும் உறைந்துள்ளதால் குடிநீருக்கும் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. பனிப்பொழிவு மற்றும் குளிரால் அத்தியாவசியப் பொருட்கள் கூட கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அல்லாடி வருகின்றனர்.