ஹிஸ்புல்லா டிரோன் தாக்குதலில் இஸ்ரேல் வீரர் பலி! கடும் கோபத்தில் நெதன்யாகு
ஜெருசலேம்: போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீது ஹிஸ்புல்லாக்கள் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் இஸ்ரேல் வீரர் ஒருவர் பலியாகினார். 6 பேர் காயம் அடைந்துள்ளனர். போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தி வீரர் ஒருவரை கொலை செய்து இருப்பது இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
இஸ்ரேலின் அண்டை நாடுகளில் ஒன்றாக லெபனான் உள்ளது. லெபனானின் தெற்கு பகுதியில் ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஈரானிடம் நிதி மற்றும் ஆயுத உதவி பெற்று வரும் ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

ஹிஸ்புல்லா மீது தாக்குதல்
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, ஹிஸ்புல்லா அமைப்பு காசாவில் செயல்பட்டு வந்த ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதனால், இஸ்ரேல், ஹிஸ்புல்லா அமைப்பையும் ஒழித்து கட்டும் நோக்கத்தில் அவ்வப்போது அந்த அமைப்பின் நிலைகள் மற்றும் பதுங்கிடங்கள் மீது வான் வழி தாக்குதல் நடத்தி வருகிறது.
இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி கடைசியில் தாக்குதல் நடத்தியதால் கோபம் அடைந்த ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது ஏவுகணைகளையும் டிரோன்களையும் வீசி தாக்கினர். இதையடுத்து இஸ்ரேலும் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாக்களின் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. தரைவழியாகவும் தாக்குதல் நடத்தி ஹிஸ்ப்புல்லாக்களின் கட்டுப்பாட்டில் இருந்த சில முக்கிய நகரங்களை கைப்பற்றியது.
இஸ்ரேல் வீரர் பலி
தெற்கு லெபனாலின் சுமார் 5 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் வரை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டுல் எடுத்துள்ளது. லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அமெரிக்கா - ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதையடுத்து, லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடாது என்று ஈரான் முக்கிய கோரிக்கையாக முன்வைத்தது.
இதையடுத்து, இஸ்ரேல் - லெபனான் இடையே கடந்த 16 ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. மே இரண்டாவது வாரம் வரை இந்த போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் மீது ஹிஸ்புல்லாக்கள் டிரோன் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில் இஸ்ரேல் வீரர் ஒருவர் பலியாகினார். 6 பேர் காயம் அடைந்துள்ளனர்.
கடும் கோபத்தில் நெதன்யாகு
போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தி வீரர் ஒருவரை கொலை செய்து இருப்பது இஸ்ரேலுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இஸ்ரேல் பதிலடி தாக்குதல் தொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. இஸ்ரேல் திருப்பி அடிக்கும்பட்சத்தில் ஹிஸ்புல்லாக்களும் தாக்குவார்கள் என்பதால் மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம் அதிகரித்து வருகிறது.
காயம் அடைந்த வீரர்களை இஸ்ரேல் படைகள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கும் போது அவற்றை குறிவைத்து ஹிஸ்புல்லாக்கள் டிரோன் தாக்குதல் நடத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகின்றன. ஹிஸ்புல்லாக்கள் போர் நிறுத்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டும் நிலையில், இஸ்ரேல்தான் தொடர்ந்து தங்கள் மீது தாக்குதலை நடத்துவதாக ஹிஸ்புல்லா கூறி வருகிறது. அதிகரிக்கும் பதற்றத்தால் எந்த நேரமும் மீண்டும் மோதல் வெடிக்கலாம் என்று சொல்லும் அளவுக்கு அங்கு டென்ஷன் நிலவுகிறது.














Click it and Unblock the Notifications