அதிபர் தேர்தல்: முதல் விவாதத்திற்கு பிறகு முந்துகிறார் ஹிலரி; சரிகிறது ட்ரம்ப் செல்வாக்கு!
வாஷிங்டன்(யு.எஸ்): அமெரிக்க அதிபர் தேர்தலில் முதல் நேரடி விவாதத்திற்கு பிறகு ஹிலரி க்ளிண்டனுக்கு ஆதரவு பெருகிறது. எதிரணியில் டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு புதுப்புது சிக்கல்களில் சிக்கித் தவிக்கிறார்..
கடும் போட்டி நிலவும் ஃப்ளோரிடா மாநிலத்தில் ட்ரம்பை விட ஹிலரி 4 சதவீதம் கூடுதல் ஆதரவுடன் முன்னணியில் இருப்பதாக புதிய கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இன்னொரு முக்கிய மாநிலமான நியூ ஹாம்ஷையரில் ஹிலரி 42 சதவீதம் ட்ரம்ப் 35 சதவீதம் ஆதரவு பெற்றுள்ளனர்.
முதல் விவாதத்திற்கு பிறகு மேசன் - டிக்சன் அமைப்பு ஃப்ளோரிடாவில் நடத்திய கருத்துக் கணிப்பு மற்றும் WBURவின் நியூ ஹாம்ஷயர் கருத்துக் கணிப்புகளில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் ஃபாக்ஸ் நியூஸ் நடத்திய கருத்துக்கணிப்பிலும் ஹிலரி முன்னணியில் இருக்கிறார். யார் சிறந்த அதிபர் ஆவார் என்ற கேள்விக்கு ஹிலரிக்கு 43 சதவீதமும் ட்ரம்ப் க்கு 40 சதவீதம் பேர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.. மூன்றாவது வேட்பாளர் கேரி ஜான்சனுக்கு 8 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
அதிபர் பதவிக்கான பொறுமையும் நிதானமும் உள்ளவர் யார் என்ற கேள்விக்கு 67 சதவீதத்தினர் ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ட்ரம்புக்கு 37 சதவீதம் மட்டுமே ஆதரவளித்துள்ளனர்.
முதலாவது நேரடி விவாதத்தில் ஹிலரி வெற்றி பெற்றுள்ளதாக 61 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
இன்னொரு பக்கம் இஸ்லாமிய சட்டம் ஆண்களுக்கு சிறந்தது என்று முன்பு ட்ரம்ப் கூறியுள்ளதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் ஷரியா சட்டத்தின் படி, ஆண்கள் எப்போது வேண்டுமானலும் மனைவியை விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று முன்பு கருத்து கூறியிருக்கிறார். அதை தற்போது வெளியிட்டு ட்ரம்ப் எப்போதுமே பெண்களுக்கு எதிரானவர் என்று ஹிலரி தரப்பு பரப்புரை செய்கின்றனர்.
ட்ரம்பின் முதல் மனைவி கூறியதாக மற்றுமொரு தகவலும் உலா வருகிறது. குழந்தை பெற்ற பிறகு அழகு குறைந்து விட்டதாகவும் அதானல் விவாகரத்து செய்வதாக ட்ரம்ப் தன்னிடம் தெரிவித்தார். நான் முக அழகையும் உடல் அழகையும் மெருகுபடுத்திப் பார்த்தாலும், ட்ரம்பின் கண்களுக்கு கவர்ச்சியாக தெரியவில்லை. ஆகவே என்னை விவாகரத்து செய்து விட்டார் என்றும் கூறியுள்ளார்.
ட்ரம்புக்கு பெண்கள் ஓட்டுகள் கிடைக்காது என்ற நிலைக்கு அவர் தள்ளப்பட்டு வருகிறார். அதிபர் விவாதத்தில் ட்ரம்ப் பேசிய பேச்சுக்களை அவருக்கு எதிராக திருப்பும் பணியையும் ஹிலரி தரப்பு செய்து வருகிறது. முன்னதாக நேர் எதிராக பேசிய பேச்சுக்களை வெளியிட்டு, அமெரிக்க மக்களிடம் பொய் சொல்லிவிட்டார் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
நாடு முழுவதும் குடியரசுக்கட்சிக்கு ஆதரவான பத்திரிக்கைகள், ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸ் மா நிலத்தின் முக்கிய பத்திரிக்கைகள் கூட ஹிலரிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்களே கைவிட்டு விட்ட நிலையில் ட்ரம்ப் இருக்கிறார்.
அடுத்த விவாதத்தில் ட்ரம்ப் பங்கேற்பாரா என்ற கேள்வியையும் சிலர் எழுப்பியுள்ளனர்.
ஆனாலும் அவர் மீது நம்பிக்கை உள்ளவர்களும் இருக்கிறார்கள். சரிந்துவரும் செல்வாக்கைத் தடுத்து நிறுத்துவாரா? அடுத்து என்ன செய்யப்போகிறார் என்ற ஆவலும் எழுந்துள்ளது.
இந் நிலையில் அக்டோபர் 4ம் தேதி துணை அதிபர் வேட்பாளர்கள் நேரடியாக பங்கேற்கும் விவாதம் நடைபெற உள்ளது.
-இர தினகர்