பாக். ஆளுநர் வீட்டிற்கு மும்பையில் இருந்து போன் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
கராச்சி: மும்பையில் இருந்து வந்த போலி போன் அழைப்பால் பாகிஸ்தானின் சிந்த் மாகாண ஆளுநரின் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாண ஆளுநராக இருப்பவர் இஷரத்துல் இபாத். சனிக்கிழமை அதிகாலை ஒரு போன் அழைப்பு வந்துள்ளது. போனை எடுத்துப் பேசியபோது மறுமுனையில் பேசியவர் இபாதின் கராச்சி வீடு மற்றும் அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து இபாதின் வீடு மற்றும் அலுவலகத்தில் தீவிர சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அதன் பிறகே போன் மூலம் வந்த மிரட்டல் பொய்யானது என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து உளவுத் துறை நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வந்த அழைப்பு மும்பையில் இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அழைப்பு போலியாக இருந்தாலும் இபாதின் வீடு மற்றும் அலுவலகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் இருந்து வந்த போன் அழைப்பால் சிந்த் மாகாண ஆளுநரின் வீடு மற்றும் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.