"டேய் எப்புட்றா.." வங்கதேசத்தில் தூங்கிய சிறுவன் எழுந்ததோ மலேசியாவில்.. விபரீதமான விளையாட்டு
வங்கதேசத்தில் தூங்கிய சிறுவன் ஒருவன் மலேசியாவில் எழுந்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
மலேசியா: வங்கதேசத்தில் உள்ள ஒரு குட்டி நகரில் தூங்கிய சிறுவன் இப்போது மலேசியாவில் கண்டறியப்பட்டுள்ளான். அது எப்படி நடந்தது என்பது குறித்துப் பார்க்கலாம்.
குழந்தைகளாக இருக்கும் போது நாம் வீதியில் உள்ள சிறுவர், சிறுமிகளுடன் இணைந்து பல விளையாட்டுகளை விளையாடி இருப்போம். அப்போது பெற்றோர் குறிப்பிட்ட இடத்தை தாண்டிப் போய் விளையாடக் கூடாது என்று பெற்றோர் தொடர்ந்து எச்சரிப்பார்கள்.
அவர்கள் சொல்லும் இடத்தை தாண்டி சென்று விளையாடினால் நிச்சயம் உதை கிடைக்கும். அந்த வயதில் ஏன் அப்படிப் பெற்றோர்கள் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள் என்று நாம் நினைக்கலாம். எரிச்சலும் கூட அடையலாம்.

பெற்றோர்
ஆனால், அவர்கள் இப்படிச் சொல்ல முக்கிய காரணம் உள்ளது. ஏரியாவை தாண்டி வெளியே எங்காவது விளையாடச் சென்றால் நமது பாதுகாப்பிற்குத் தான் உத்தரவாதம் இல்லை. இதன் காரணமாகவே நமது ஏரியாவை தாண்டி விளையாடப் போகக் கூடாது என்று அவர்கள் தொடர்ந்து வலியுறுத்துவார்கள். அப்படி பெரியவர்கள் சொன்னதைக் கேட்கவில்லை என்றால் நாம் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். அப்படி தான் பெற்றோர் சொன்னதைக் கேட்காமல் எங்கோ சென்று விளையாடிய சிறுவன் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்துள்ளது.

வங்கதேசம்
வங்கதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் கண்ணாமூச்சி விளையாடும் போது.. நடந்த ஒரு சம்பவம் அவனைப் பல ஆயிரம் கிமீ தூரத்தில் இருக்கும் மலேசியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. அந்த சிறுவன் வங்கதேசத்தின் துறைமுக நகரான சிட்டகாங்கை சேர்ந்த ஃபாஹிம் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அந்த சிறுவன் கடந்த ஜனவரி 11ஆம் தேதி தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடியுள்ளார்.

தூக்கம்
அப்போது விளையாட்டின் ஒரு பகுதியாக அந்த சிறுவன் ஒளிந்து கொள்ள அங்கே இருந்த கண்டெய்னருக்கு உள்ளே சென்றுள்ளான். கண்டெய்னருக்கு உள்ளே சென்ற சிறுவனுக்குக் கொஞ்ச நேரத்தில் களைப்பில் தூக்கம் வந்துள்ளது.. சரி கண்டெய்னர் தானே என்று நினைத்து அந்த சிறுவனும் அப்படியே கண் அசந்துவிட்டான். துரதிர்ஷ்டவசமாக, அந்த சிறுவன் ஏறியது சாதாரண கண்டெய்னர் இல்லை. அது கப்பலில் ஏற்றி வெளிநாட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய கண்டெய்னர் ஆகும்.

மலேசியா
அங்கிருந்த அதிகாரிகள் அந்த கண்டெய்னரை மலேசியாவிற்கு அனுப்பிவிட்டனர். கொஞ்ச நேரத்தில் எழுந்த அந்த சிறுவனுக்கு எங்கு இருக்கிறோம் எனப் புரியவில்லை. கண்டெய்னர் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், வெள்யே செல்லவும் அந்த சிறுவனால் முடியவில்லை. எப்படியாவது வெளியே வந்துவிட வேண்டும் என்று அந்த சிறுவன் கத்தியும் கதறியும் பார்த்துள்ளான். இருப்பினும், சிறுவனின் அலறல் சத்தம் வெளியே யாருக்கும் துளி கூட கேட்கவில்லை. இதனால் பயத்திலேயே தனிமையில் அந்த சிறுவன் கண்டெய்னரில் காலத்தைக் கழிக்க வேண்டியிருந்து உள்ளது.

6 நாட்கள்
இப்படியே சுமார் 6 நாட்கள் அந்த சிறுவன் கண்டெய்னரிலேயே இருந்துள்ளான். அதன் பின்னர் மலேசியாவில் அந்த கண்டெய்னரை திறந்து பார்த்த அதிகாரிகள் சிறுவனைப் பார்த்தவுடன் மிரண்டு போய்விட்டனர். சுமார் 2,300 மைல் தூரத்திற்கு அந்த சிறுவன் கண்டெய்னரிலேயே பயணித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அந்த சிறுவன் கண்டெய்னரிலேயே இருந்ததில் அவனது உடல்நிலை எந்தளவுக்கு மோசமான பாதிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகத் தெரிகிறது.

மருத்துவச் சிகிச்சை
அதிகாரிகள் அந்த சிறுவனைக் கண்டுபிடித்த போது, அவனுக்குக் கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. இதையடுத்து அந்த சிறுவன் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இது குறித்து மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் கூறுகையில், "சிறுவன் கன்டெய்னரில் நுழைந்து, தூங்கிவிட்டான்.. இங்கு மலேசியாவில் கண்டெய்னரை திறந்த போது அதிகாரிகளை அவனைக் கண்டுபிடித்தனர்" என்றார்.

ஆள் கடத்தல்
முதலில் கண்டெய்னருக்குள் சிறுவனைப் பார்த்தவுடன் மலேசியா அதிகாரிகள் அச்சிறுவன் கடத்தப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகித்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே முதற்கட்ட விசாரணையையும் தொடங்கியுள்ளனர். இருப்பினும், சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. சிகிச்சைக்குப் பின், சிறுவன் மீண்டும் வங்கதேசத்திற்கு அனுப்பப்படுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications