இஸ்ரேல் போர்.. "சீன" ட்ரோஜனை கையில் எடுத்த ஹமாஸ் படை? ஒட்டுமொத்த உளவு அமைப்பும் முடக்கியது எப்படி
டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் நேற்று நடந்த தாக்குதலில் பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்று ஆரம்பக்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 500 பேரின் உயிரைப் பறித்துள்ளது இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர். இந்தத் தாக்குதலை இஸ்ரேல் துளியும் எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை. இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்த காலங்களிலும் தாக்குதல் நடந்துள்ளது.

ஆனால், இந்த முறை யாருமே எதிர்பார்க்காத வகையில் மெகா தாக்குதலை ஹமாஸ் படை நடத்தியுள்ளது. வெறும் 20 நிமிடத்தில் 50 ஆயிரம் குண்டுகளைப் பொழிந்துள்ளனர். மேலும், பல்வேறு பக்கங்களில் இருந்தும் ஹமாஸ் படையைச் சூழ்ந்து தாக்கியுள்ளனர்.
திடீர் தாக்குதல்: இது திடீரென நடந்த தாக்குதலைப் போலத் தெரியவில்லை. நீண்டகாலமாக நன்கு திட்டமிடப்பட்டு ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட ஒரு தாக்குதலைப் போலவே தெரிவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். மேலும், நேற்று நடந்த தாக்குதலில் ஹமாஸ் படையைத் தாண்டி பலருக்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இங்கே மற்றொரு சந்தேகத்திற்குரிய விஷயம் இருக்கிறது..
அதாவது இஸ்ரேல் நாட்டில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் இருக்கும். ஆனால், இவ்வளவு பெரிய தாக்குதல் நடந்த போதிலும், எந்தவொரு பாதுகாப்பு அமைப்பில் இருந்தும் அலர்ட் வரவில்லை என்பதே இங்குப் பலருக்கும் சந்தேகம்... நிலம், வான் மற்றும் கடல் என மூன்று பக்கம் இருந்து தாக்குதல் வந்த போதிலும், அது குறித்து எந்தவொரு அலர்டும் முன்கூட்டியே வராமல் இருந்தது, இஸ்ரேல் உளவுத்துறையின் மாபெரும் தோல்வியாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு அமைப்புகள்: இஸ்ரேலுக்கும் காசா பகுதிக்கும் இடையேயான எல்லையில் பாதுகாப்பு பலமாக இருக்கும். ஆனாலும் எந்த எல்லையைப் பல நூறு ஹமாஸ் படையினர் அசால்டாக கடந்து சென்றுள்ளனர். ராணுவம், ரேடார் அமைப்புகள், கேமராக்கள், வேலியில் உள்ள எச்சரிக்கை அமைப்பு என்று எதுவும் வேலை செய்யவில்லை. இது பலத்த சந்தேகத்தை எழுப்புகிறது.
இஸ்ரேல் நாட்டில் உள்ள ஷின் பெட் (இஸ்ரேல் பாதுகாப்பு நிறுவனம்), இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள், சர்வதேச அளவில் புகழ்பெற்ற மொசாட் என்று மூன்றும் இருந்தும் இஸ்ரேல் இந்தத் தாக்குதலைக் கோட்டை விட்டுள்ளது.. ஹமாஸ் படையினர் எல்லையில் உள்ள அனைத்து வேலிகளையும் வெட்டியுள்ளனர். படகு மற்றும் பாரசூட் மூலமாகவும் அவர்கள் இஸ்ரேல் எல்லைக்குள் புகுந்துள்ளனர். ஆப்பிரிக்கா அல்லது ஐரோப்பாவில் இருந்து ஹமாஸ் படைக்கு அதிநவீன ஆயுதங்கள் கிடைத்திருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்களில் தெரிய வந்துள்ளது.
சீனா கனெக்ஷன்: இந்தளவுக்கு மிகப் பெரிய தாக்குதலை நடத்த ஏதுவாக சரியாக ஒரே நேரத்தில் இஸ்ரேல் நாட்டின் அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும் முடங்கியுள்ளது. இதற்குச் சீனாவின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டின் அனைத்து பாதுகாப்பு எச்சரிக்கை அமைப்புகளையும் முடக்கச் சீன ட்ரோஜன் பயன்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் நடந்த சைபர் தாக்குதல்களை வைத்துப் பார்க்கும் போது சீனாவும் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கியுள்ளதையே காட்டுகிறது.
5,000 ஏவுகணைகள்: எந்தவொரு எச்சரிக்கைகளும் இல்லாமல் எப்படி 5,000 ஏவுகணைகள் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது எப்படி ஏவப்பட்டது என்ற மெகா கேள்வியும் இங்கே இருக்கிறது. தாக்குதல் தொடங்கி இரண்டு மணி நேரம் வரை இஸ்ரேலால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், இத்தனை ஆண்டுகளாக இஸ்ரேலைப் பாதுகாத்து வந்த அயர்ன் டோம் அமைப்பும் கூட சீன ட்ரோஜனை வைத்து முடக்கப்பட்டிருக்கலாம்.
ஆக மொத்தத்தில் நேற்று இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஹமாஸ் படையைத் தாண்டி பல சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போர் முடிந்து இது குறித்து இஸ்ரேல் நிச்சயம் விரிவான ஒரு விசாரணையை நடத்தும் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications