உயிரிழந்த வளர்ப்பு நாய்.. ரூ.19 லட்சம் செலவழித்து குளோனிங் செய்த பெண்.. இது எப்படி சாத்தியம்?
பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த பெண் வளர்த்த செல்ல நாய் திடீரென உயிரிழந்துவிட்டது. அந்த நாயின் இழப்பைத் தாங்க முடியாமல் அவதிப்பட்ட அந்த பெண், நாயை குளோனிங் செய்ய முடிவு செய்துள்ளார். இதற்காகப் பல லட்ச ரூபாய் செலவழித்த அந்த பெண் ஒரு வழியாகத் தனது செல்ல நாயை குளோனிங் செய்துவிட்டார். இது குறித்து நாம் பார்க்கலாம்.
சீனாவை சேர்ந்த பெண் ஒருவர் செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த நாய் எதிர்பாராத வகையில் உயிரிழந்த நிலையில், அதன் பிரிவை அந்த பெண்ணால் தாங்கவே முடியவில்லை. இதனால் இறந்த செல்ல நாயின் திசுக்களை எடுத்து அந்த பெண் குளோனிங் செய்து, அப்படியே தனது நாயைப் போல குளோனிங் நாயை உருவாக்கியுள்ளார். இதற்கு அந்த பெண்ணுக்கு சுமார் ரூ.19 லட்சம் (160,000 யுவான்) செலவாகியுள்ளது.

ஜோக்கர்
கிழக்கு சீனாவின் ஹாங்சோவைச் சேர்ந்த சூ என்ற அந்தப் பெண், கடந்த 2011ம் ஆண்டு டாபர்மேன் இன நாயை வாங்கியுள்ளார். அதற்கு ஜோக்கர் என்று பெயரிட்டு வளர்த்துள்ளார். இருவருக்கும் இடையே பிரிக்கவே முடியாத ஒரு பிணைப்பு இருந்துள்ளது. சூ தனது பள்ளிப்படிப்பை முடித்து, வேலைக்குச் சென்ற போதிலும் ஜோக்கர் அவரது வாழ்க்கையில் ஒரு பகுதியாகவே இருந்துள்ளது.
இந்தச் சூழலில் தான் ஒன்பது வயதில் ஜோக்கருக்கு அதன் கழுத்தில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால், விலங்குகளுக்கு மயக்க மருந்து கொடுக்கும் போது அது உயிருக்கே ஆபத்தாக முடியலாம். இதனால் மயக்க மருந்து இல்லாமல் ஆப்ரேஷன் செய்யப்பட்டது. அப்போதும் ஜோக்கர் அமைதியாக ஆப்ரேஷனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தது.
உயிரிழந்த செல்ல நாய்
இருப்பினும், அடுத்த ஆண்டே ஜோக்கரின் உடல்நிலை மோசமடைந்தது.. இருமல், மூச்சுத்திணறல் மற்றும் இழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டன. ஜோக்கருக்கு சிறந்த மருத்துவச் சிகிச்சை கிடைப்பதை சூ உறுதி செய்தார். இருப்பினும், வயதானதால் கடந்த 2022இல் 11 வயதில் ஜோக்கர் மாரடைப்பால் உயிரிழந்தது.
இது தொடர்பாக சூ மேலும் கூறுகையில், "ஜோக்கர் எனது நெருங்கிய நண்பர். ஜோக்கருடன் நான் பகிர்ந்த நாட்கள் அழகானவை. நான் படித்து முடித்து வேலைக்குச் செல்லும் காலம் வரை ஜோக்கர் என்னுடன் தான் இருந்தான். ஜோக்கர் எப்போதும் மிகவும் நம்பிக்கையுடனும் வலிமையுடனும் இருப்பான். எந்தவொரு விஷயத்தையும் துணிச்சலாக எதிர்கொள்வான்" என்றார்.
குளோனிங்
ஜோக்கர் திடீரென உயிரிழந்த சூழலில், அது சூவை கடுமையாகப் பாதித்துள்ளது. இதனால் தூக்கமின்மை, நோய் எதிர்ப்புச் சக்தி பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அவர் எதிர்கொண்டுள்ளார். இதனால் தனது ஜோக்கருக்கு குளோனிங் மூலம் மீண்டும் கொண்டு வர சூ முடிவு செய்துள்ளார். சீனாவில் செல்ல பிராணிகளை குளோனிங் செய்யும் நடைமுறை பல காலமாகவே இருக்கிறது. சீனாவில் விலங்குகளை குளோனிங் செய்வது என்பது சட்டப்பூர்வமானதாகும். இருப்பினும், சில குறிப்பிட்ட நெறிமுறைகளுக்கு மட்டும் இணங்க வேண்டும்.
ரூ.19 லட்சம் செலவு
குளோனிங் சென்டர் சென்ற அந்த பெண், முழு கட்டணம் 160,000 யுவானை (சுமார் ரூ.19 லட்சம்) முன்கூட்டியே செலுத்திவிட்டார். அவர்களின் ஜோக்கரின் வயிற்றிலிருந்தும் அதன் காதுகளின் நுனியிலிருந்தும் ஒரு சிறிய தோலை எடுத்து குளோனிங் செயல்முறையை ஆரம்பித்துள்ளனர். சுமார் ஓராண்டுக்குப் பிறகு குளோனிங் வெற்றிகரமாக முடிந்துவிட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆசையாக சென்று புதிய நாயை வீட்டுக்கு அழைத்து வந்தார். அதற்கு "லிட்டில் ஜோக்கர்" என்று பெயரிட்டார்.
ஜோக்கரை போலவே லிட்டில் ஜோக்கருக்கும் மூக்கின் அருகே கருப்புப் புள்ளி இருந்துள்ளது. மேலும், ஜோக்கரின் நடவடிக்கைகளைப் போலவே லிட்டில் ஜோக்கரின் நடவடிக்கைகளும் இருப்பதாகச் சொல்கிறார் சூ. அவர் மேலும் கூறுகையில், "ஜோக்கர் தான் எனது முதல் நாய். இதனால் ஜோக்கரை சரியாக வளர்க்கவில்லையோ என்று தோன்றும். லிட்டில் ஜோக்கருக்கு முழு அன்பைக் கொடுத்து வளர்க்கப் போகிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications