டிக்டாக் "அழகிகளை" பார்த்து மயங்கிய ரஷ்ய வீரர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உக்ரைன்! என்ன நடந்தது
மாஸ்கோ: உக்ரைன் போர் பல மாதங்களா தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ரஷ்யப் படைகளைக் குறித்து வைத்து உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், அந்த தாக்குதலின் பின்னணி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் கடந்த பிப். மாதம் தொடங்கிய போதிலும், அது பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர பல்வேறு தரப்பினரும் தீவிர முயற்சி எடுத்த போதிலும், அது பெரியளவில் பலன் தரவில்லை.
முதலில் சில நாட்கள் இந்த போரில் ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய போதிலும், இப்போது தொடர்ச்சியாக இது பின்னடைவைச் சந்தித்து வருகிறது.. போரின் தொடக்கக் காலத்தில் உக்ரைனிடம் கைப்பற்றிய பகுதிகளைக் கூட ரஷ்யா இழுத்து வருகிறது.
என்னாச்சு.. திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா! ஆனால் 36 மணி நேரத்திற்கு மட்டுமே! ஏன் தெரியுமா?
போர்
இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர யாராலும் இயலவில்லை. இந்தச் சூழலில் புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ள நிலையில், அங்கு உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சுமார் 400க்கும் மேற்பட்ட ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு ரஷ்யப் படைகள் இருந்த ஒரு கட்டிடத்தைக் குறிவைத்து உக்ரைன் தாக்குதல் நடத்தியுள்ளது.
டிக்டாக் அழகிகள்
உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து ஒரே தாக்குதலில் இத்தனை வீரர்களை ரஷ்யா இழப்பது இதுவே முதல்முறையாகும். இதனிடையே இந்த தாக்குதலை உக்ரைன் எப்படித் திட்டமிட்டு நடத்தியது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.. உக்ரைன் போர் ஆரம்பத்தில், சில ரஷ்ய வீரர்கள் மொபைல் மூலம் கால் செய்தும், டிக்டாக்கில் அழகிகள் வீடியோவையும் பார்த்துள்ளனர். இந்த தரவுகளை வைத்தே ரஷ்யப் படைகளைக் குறிவைத்து உக்ரைன் படைகள் தாக்குதல் நடத்தியது. அதாவது மொபைல் போன் சிக்னலை இடைமறித்து அவர்கள் இருப்பிடத்தைக் கண்டறிவார்கள்.
மொபைல்
இப்போது போர் தொடங்கி சுமார் ஓர் ஆண்டு நெருங்கும் நிலையில், இப்போதும் கூட இது தொடரவே செய்கிறது. சமீபத்திய உக்ரைன் தாக்குதல் கூட ரஷ்ய வீரர்களின் மொபைல் பயன்பாடு மூலம் இருப்பிடத்தை அறிந்து கொண்டு நடத்தப்பட்ட தாக்குதல் தான் என்று கூறப்படுகிறது. போர் தொடங்கிய உடனேயே, ரஷ்ய வீரர்கள் மொபைல் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இருந்த போதிலும், அதைக் கண்டு கொள்ளாமல் ரஷ்யப் படைகள் மொபைல் பயன்படுத்தி வருகிறது. போர் நடைபெறும் இடத்தில் இருந்து சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஃபோட்டோக்களே இதற்குச் சாட்சி..!
பேராபத்து
ரஷ்ய வீரர்களிடம் இருந்து மொபைலை வாங்கி வைத்துக் கொண்டு தான் போர்க்களத்திற்கே அனுப்பியுள்ளனர். இருப்பினும், உக்ரைனுக்கு வந்தவுடன் அவர்கள் மீண்டும் மொபைலை பயன்படுத்தத் தொடங்கி விடுகின்றனர். உக்ரைன் மக்களின் மொபைலை திருடியும் கொல்லப்படும் உக்ரைன் மக்களின் மொபைலை எடுத்தும் இவர்கள் பண்படுத்தி வருகின்றனர். இப்படி எடுக்கும் மொபைலை கொண்டு அவர்கள் தங்கள் மனைவி, கேர்ள் பிரண்ட் அல்லது குடும்பத்தினருக்கு அழைக்கின்றனர். அல்லது டிக்டாக் போன்ற சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துகின்றனர். இதுவே அவர்களுக்கு பேராபத்தில் தள்ளுகிறது.
வீரர்களுக்குத் தெரியாது
இப்படி ரஷ்யப் படைகள் தங்கள் இருக்கும் இடத்தில் இருந்து குடும்பத்தினருக்குக் கால் செய்து பேசுவதை உக்ரைன் படைகள் இடைமறித்துக் கேட்கின்றன. அதில் பல கால்களில் ரஷ்யப் படைகள் தங்கள் தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்றே கூறுகின்றனர். மேலும், தங்கள் உக்ரைன் படைகள் கேட்டுக் கொண்டிருக்கலாம் என்றும் கூறும் அவர்கள், இருக்குமிடம் குறித்த தகவல்களைப் பகிர்வதில்லை. ஆனால் செல்போன் தரவு மட்டும் இருந்தால் கூட போதும்.. இருக்கும் இடத்தை கண்டறிய முடியும் என்பதை ரஷ்ய வீரர்களுக்குப் பாவம் தெரியவில்லை. இந்த தரவை வைத்தே அவர்கள் எந்த கட்டிடத்தில் உள்ளனர் என்பது வரை துல்லியமாகக் கண்டறிய முடியும்.
ரஷ்யாவின் தவறு
இதுவே இப்போது நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழக்கக் காரணமாக அமைந்துவிட்டது. அதேநேரம் இவ்வளவு பெரிய உயிரிழப்பிற்கு மற்றொரு காரணமும் உள்ளது. எப்போதும் போர்க் களத்தில் பாதுகாப்பு கருதி, வீரர்களை ஒரே இடத்தில் தங்க வைக்காமல் பரவலான இடங்களில் தங்க வைப்பார்கள். ஆனால், ரஷ்யா பல நூறு வீரர்களை ஒரே இடத்தில் தங்க வைத்திருந்தது. இது ரஷ்யப் போர் தளபதிகள் செய்த மிகப் பெரிய தவறு. இதுவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக அமைந்துவிட்டது.
உக்ரைன்
அதேநேரம் இது ரஷ்யாவுக்கு மட்டுமே இருக்கும் பிரச்சினை என்று சொல்லிவிட முடியாது. உக்ரைன் வீரர்கள் பலரும் கூட இப்படி செல்போனை பயன்படுத்தி, ரஷ்யர்களுக்கு தங்கள் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்து விடுகிறார்கள். ஆனால், ஒப்பிட்டளவில் ரஷ்யப் பக்கம் தான் இது அதிகம் நடக்கிறது. மேலும், உக்ரைன் உயர் தளபதிகள் பெரும்பாலும் பாதுகாப்பான என்கிரிப்ட் செய்யப்பட்ட மொபைல் மூலமே தொடர்பு கொள்கிறார்கள். இந்த என்கிரிப்ட் செய்யப்பட்ட தகவல்களை அவ்வளவு சீக்கிரம் யாராலும் ஹேக் செய்து இருப்பிடத்தைக் கண்டறிய முடியாது.
பல நாடுகள்
உக்ரைன் போர் மட்டுமின்றி, இந்த 21ஆம் நூற்றாண்டில் மொபைல் பயன்பாடு என்பது பல போர்களிலும் ராணுவத்திற்குத் தலைவலியாக மாறியுள்ளது. ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் மொபைலை பயன்படுத்தியது, அவர்கள் இருப்பிடங்களை எதிரிகளுக்குத் தெரியப்படுத்தியது. இருப்பினும், அப்போது எதிரிகளிடம் நீண்ட தூர ஆயுதங்கள் இல்லை என்பதால் அமெரிக்கா எஸ்கேப் ஆனது. கடந்த 2018இல் கூட ஒரு ஃபிட்னஸ் செயலியில் இருந்து டேட்டா கசிந்ததால் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கப் படைகளின் இருப்பிடங்கள் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.