இரவோடு இரவாக இறங்கிய ராணுவம்! பாகிஸ்தானில் கடத்தப்பட்ட ரயில் மீட்பு! கடைசி நிமிடத்தில் என்ன நடந்தது?
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஜாபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கடத்தப்பட்டது. உள்ளே சிக்கியிருந்த பயணிகளை மீட்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் இறங்கியது. சுமார் 40 மணி நேரமாக நீடித்த இந்த மீட்பு நடவடிக்கை இப்போது முடிவுக்கு வந்துள்ளது. பாகிஸ்தான் ராணுவம் தீவிரவாதிகளைச் சுட்டு வீழ்த்தி, பயணிகளைப் பாதுகாப்பாக மீட்டதாக அறிவித்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் தனிநாடு தொடர்பாகப் பல ஆண்டுகளாகவே மக்கள் போராட்டம் நடந்து வருகிறது. அங்குள்ள தீவிரவாத குழுக்கள் ஆயுதம் ஏந்தியும் போராடி வருகிறார்கள். இதனால் கடந்த பல ஆண்டுகளாகவே அங்கு ஒருவித கொந்தளிப்பான சூழலே நிலவி வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு யாருமே எதிர்பார்க்காத ஒரு சம்பவம் நடந்தது

பாகிஸ்தான்
அதாவது பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டாவில் இருந்து பெஷாவர் ஜாபர் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் சென்ற நிலையில், அதை பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு கடத்தியது. சினிமாவில் வருவது போல சுமார் 100க்கும் மேற்பட்ட பலுசிஸ்தான் விடுதலை வீரர்கள் இணைந்து அந்த ரயிலைக் கடத்தினர். ரயிலில் மொத்தம் 500க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் பணய கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ராணுவம் இறங்கியது. கடந்த 3 நாட்களாக மீட்புப் பணிகள் நடந்து வந்தது. முதற்கட்டமாக 190 பயணிகள் ரயிலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ராணுவம் மூலம் பயணிகளை மீட்கப் பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டது. அதேநேரம் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அதற்குப் பதிலடி கொடுத்ததாகவும் 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்
இதற்கிடையே பாகிஸ்தான் ராணுவம் தனது இறுதி தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியதாகவும் இதன் மூலம் ரயிலில் இருந்த அனைத்து பயணிகளும் மீட்கப்பட்டுள்ளதாகப் பாகிஸ்தான் ராணும் அறிவித்துள்ளது. முழுமையாகத் திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 33 பிரிவினைவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பல நூறு பயணிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த கமேண்டோ ஆப்ரேஷனில் 21 பயணிகளும் 4 பாதுகாப்புப் படை வீரர்களும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாகப் பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் அகமது ஷெரீப் சவுத்ரி, "இன்று நாங்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏராளமான மக்களை விடுவித்தோம்... கடைசி மிஷன் மிகுந்த கவனத்துடன் மேற்கொள்ளப்பட்டது" என்றார்.












Click it and Unblock the Notifications