அன்று நிலநடுக்கம்! இன்று பெரு வெள்ளம்.. பறிபோகும் உயிர்கள்! திணறும் துருக்கி! தவிக்கும் பொதுமக்கள்
துருக்கியில் இப்போது மிக மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அங்காரா: துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தே வாரங்களில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதில் இதுவரை 14 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழந்துள்ளனர்.
துருக்கியில் கடந்த மாதம் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் இணைந்து மொத்தம் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தனர்.
இதில் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே துருக்கி இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது. இந்தச் சூழலில் துருக்கியில் இப்போது மிக மோசமான புயல் வெள்ள பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. இதிலும் இழப்புகள் மிக மோசமாகப் பதிவாகியுள்ளது.

துருக்கி
தென்கிழக்கு துருக்கியில் உள்ள இரண்டு நகரங்களின் இந்த வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகள் முழுக்க வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய நிலையில், 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலநடுக்கத்தால் வீடுகளை இழந்த பலரும் கண்டெய்னர்களில் வசித்து வந்தனர். அவர்களில் பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாகத் தென் துருக்கியில் உள்ள சான்லியுர்ஃபாவில் வெள்ளம் காரணமாக 14 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழப்பு
அதியமான் பகுதியிலும் இதேபோல இரண்டு குடும்பங்கள் தங்கியிருந்த கண்டெய்னர்களும் வெள்ளத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. அங்கு இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களில் ஒருவர் இந்த கண்டெய்னரில் வசித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமின்றி பலர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைத் தேடும் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நிலநடுக்கம் ஏற்பட்ட ஐந்தே வாரங்களில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

கனமழை
துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில், அதியமான் மாகாணத்தில் 136 மிமீ (5.4 இன்) மழையும், சான்லியுர்ஃபாவில் 111 மிமீ (4.4 இன்) மழையும் பெய்துள்ளது அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதன் வருடாந்திர மழையில் மூன்றில் ஒரு பகுதி மழை, இப்போது அங்கு சில நாட்களில் பெய்துள்ளது. இது குறித்து சான்லியுர்ஃபா ஆளுநர் சாலிஹ் அய்ஹான், "இதுவரை நாங்கள் இதுபோன்ற வெள்ளத்தைப் பார்த்ததில்லை..தரை தளத்தில் குடியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தியுள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

மீட்புப் பணிகள்
இதுவரை ஐந்து பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இதில் வெள்ள நீரில் சிக்கிய பல வாகனங்கள் அப்படியே இழுத்துச் செல்லப்பட்டது. மேலும், உள்ளே சிக்கியவர்களுக்கு உதவ முயன்றவர்களும் அடித்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். சான்லியுர்ஃபாவில் ஓடும் நீரில் இருந்து சட்டையில்லாமல் ஒருவர் மீட்கப்படும் ஃபோட்டோ மற்றும் வீடியோவும் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

துருக்கி அரசு
மேலும், மாயமானவர்களில் இருவர் தீயணைப்பு வீரர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது. வெள்ள பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், அங்கிருந்து விலகியே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு மருத்துவமனை வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், 200 நோயாளிகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டனர். வரும் நாட்களில் மழை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. துருக்கியில் வரும் மே 14இல் தேர்தல் நடக்கும் நிலையில், அடுத்தடுத்து ஏற்படும் இந்த இயற்கை பேரிடர்கள் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது.












Click it and Unblock the Notifications