போரின் பயத்தை வென்ற மனிதநேயம்.. பஹ்ரைனில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்ட 'அன்னை தமிழ் மன்றம்'
மனாமா: ஈரான் போர் காரணமாக, பஹ்ரைனில் தமிழர்கள் பலர் சிக்கி தவித்தனர். இந்நிலையில், அவர்களை 'அன்னை தமிழ் மன்றம்' பத்திரமாக மீட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் கடுமையான போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைன் விமான நிலையம் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தற்காலிகமாக மூடப்பட்டது. இதன் விளைவாக, பஹ்ரைனில் வசித்து வரும் தமிழர்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கித் தவித்தனர்.

முக்கியமாக, மருத்துவ அவசர தேவையுள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். இதையடுத்து, அவர்கள் அன்னை தமிழ் மன்றத்தை அணுகி தாயகம் திரும்ப உதவி கோரினர்.
இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் G.K மற்றும் பொதுச் செயலாளர் M. பழனிச்சாமி ஆகியோர் Gulf Air விமான சேவை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர். அதன் பின்னர், பஹ்ரைன் - சென்னை (சவுதி அரேபியா வழியாக) சிறப்பு விமான சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
TVS பயண முகவருடன் இணைந்து Gulf Air மூலம் இந்த சிறப்பு விமான சேவை இன்று (மார்ச் 18) வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. மேலும், மன்றத்தின் துணைத் தலைவர் பாலச்சந்தர், துணைப் பொதுச் செயலாளர் அருண் ,பொருளாளர் முகமது சுல்தான் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், மங்கையர் குழுவினர்கள் ஆகியோர் இணைந்து பயண ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர்.
இந்த விமானத்தில் சுமார் 192 பயணிகள், பஹ்ரைனிலிருந்து சவுதி அரேபியா வழியாக சென்னை நோக்கி பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களில் கர்ப்பிணிப் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் மற்றும் முதியவர்களும் அடங்குவது குறிப்பிடத்தக்கது.
இந்த மனிதநேய முயற்சிக்கு ஆதரவளித்த TVS பயண முகவருக்கு, Gulf Air விமான சேவைக்கும், பஹ்ரைன் அரசாங்கத்திற்கும், இந்திய தூதரகத்திற்கும் அன்னை தமிழ் மன்றம் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications