இந்தியா-சிங்கப்பூர் நடுவே விமான போக்குவரத்து ஒப்பந்தம்: மோடி அறிவிப்பு
Recommended Video
சிங்கப்பூர்: சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டு பிரதமர் லீ சீயன் லூங்குடன் 8 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார். இதில் கடல்சார் ஒத்துழைப்பு, சைபர் பாதுகாப்பு உள்ளிட்டவை அடங்கும்.
இஸ்தானா மாளிகையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது இரு தலைவர்களும் முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. பிரதமர் மோடிக்கு மதிய விருந்தை அந்நாட்டு பிரதமர் இன்று அளிக்கிறார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பேசிய மோடி கூறியதாவது:
சோதனையான காலகட்டங்களிலும் கூட இந்தியா-சிங்கப்பூர் நல்லுறவை பேணி வந்துள்ளது. இந்தியா-சிங்கப்பூர் இடையேயான விமான போக்குவரத்து மிகவும் அதிகரித்துள்ளது. இந்ததுறையில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும். பீம் ஆப் மற்றும் ரூபே வழியாக டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்வது தொடர்பாக நாங்கள் விவாதித்தோம்.
இரு நாடுகளுக்கும் நடுவே சைபர் பாதுகாப்பு மற்றும் தீவிரவாதம் என்பது முக்கியமான விவகாரம் என்பதை விவாதித்தோம். கடல்சார் பாதுகாப்பு பற்றி ஆலோசித்தோம். நீண்ட காலமாகவே இந்தியா-சிங்கப்பூர் நடுவே கடல்சார் ஒத்துழைப்பு உள்ளது. இந்திய நிறுவனங்கள் சிங்கப்பூரையும், இந்த நாட்டு நிறுவனங்கள் இந்தியாவையும் நன்கு பயன்படுத்தி வருவது மகிழ்ச்சி.
சிங்கப்பூர் எப்போதுமே இந்தியாவின் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் முக்கியத்துவம் வகிக்கும் நாடு. சிங்கப்பூரில் தொழில் தொடங்கவே இந்தியர்கள் பலரும் விரும்புகிறார்கள். பல்வேறு நிறுவன தலைமை செயல் அதிகாரிகள் இந்தியாவை விரும்புவது தெரிகிறது. விரைவில் புதிதாக விமான சேவை போக்குவரத்து ஒப்பந்தம் உருவாக்கப்படும். இவ்வாறு மோடி பேசினார்.