கடும் பனிப்புயல்: அமெரிக்கா, கனடாவில் மின்சாரமின்றி 5 லட்சம் பேர் தவிப்பு - 24 பேர் பலி
நியூயார்க்: அமெரிக்கா மற்றும் கனடாவில் தொடர்ந்து வீசி வரும் பனிப்புயலின் தாக்கத்தினால் சுமார் 5 லட்சம் பேர் மின்சாரமின்றி தவித்து வருவதாகவும், 24 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் மத்திய மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் கடந்த வார இறுதியில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டது. இதனால் நியுயார்க், வாஷிங்டன், சிகாகோ போன்ற நகரங்களின் விமான சேவை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.
அதேபோல், கனடாவின் கிழக்குப் பகுதியிலும் வீசி வரும் பனிப்புயலால் அங்குள்ள மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

விமான சேவை பாதிப்பு....
பனிப்புயலின் காரணமாக அமெரிக்காவிலிருந்து கிளம்ப வேண்டிய சுமார் 7,000 விமானங்கள் சரியான நேரத்திற்கு கிளம்ப முடியாததால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்குத் தாங்கள் விரும்பிய இடங்களுக்கு செல்லமுடியாமல் பயணிகள் அவதிப்பட்டனர்.

மின் இணைப்பு துண்டிப்பு...
பனிப்புயலின் காரணமாக அமெரிக்காவின் பல மாநிலங்களில் மின்சார சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மிக்சிகன் நகரில் 2,50,000 பேர் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று மைனே நகரிலும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மின்சாரம் இல்லாமல் அவதிபடுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீராக தாமதமாகும்....
சிதைந்துள்ள இணைப்புகளை மீண்டும் சீராக்க நாட்களாகலாம் என்று மின்சாரத்துறை தெரிவித்துள்ளது.

வழுக்கும் சாலைகள்...
அதேபோல் மீண்டும் சரி செய்யப்படாத சாலைகளும், நடைபாதைகளும் வழுக்ககூடிய அபாயம் இருக்கும் எனவே பொதுமக்கள் கவனமுடன் செயல் படவும் வலியுறுத்தப் பட்டுள்ளனர்.

பலி எண்ணிக்கை....
மோசமான வானிலையின் காரணமாக கனடாவில் 10 பேரும், அமெரிக்காவில் 14 பேரும் பலியாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications