4 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் திரும்பிய நவாஸ் ஷெரிப்.. “சிதைஞ்சு போச்சு”.. கொதித்த இம்ரான் கட்சி!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்பியுள்ள நிலையில், தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நவாஸ் ஷெரீப்பை நாடு திரும்பச் செய்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி, நாட்டின் சட்ட அமைப்பை முற்றிலும் அழித்துவிட்டது என இம்ரான் கானின் பிடிஐ கட்சி விமர்சித்துள்ளது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் மீதான ஊழல் வழக்கில், அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் கடந்த 2018ஆம் ஆண்டு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. இதையடுத்து லாகூரில் உள்ள கோட்லாக்பாத் சிறையில் நவாஸ் ஷெரீப் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு எனக் கருதி சிறையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நவாஸ் ஷெரீப், கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி லாகூரில் இருந்து லண்டன் புறப்பட்டுச் சென்றார். பாகிஸ்தானில் இம்ரான் கானின் ஆட்சி இருந்ததால், தொடர்ந்து அவர் லண்டனிலேயே தங்கி இருந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் வரும் ஜனவரி மாதத்தில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவாஸ் ஷெரிப் இன்று இஸ்லாமாபாத் திரும்பியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் இருந்து லாகூருக்கு விமானத்தில் சென்ற நவாஸ் ஷெரிப் அங்கிருந்து தனது வீட்டுக்கு செல்ல உள்ளார். அவரது வருகையை முன்னிட்டு லாகூரில் பிரம்மாண்ட வரவேற்புக்கு பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி மேலாதிக்கம் மீண்டும் ஒன்றுபடவும் பாகிஸ்தானை மீண்டும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு வரவும் நவாஸ் ஷெரிப் பாகிஸ்தானுக்கு வருகிறார் என்றும், அவர் தனது மக்களிடையே அன்பை பரப்புவதற்காக மீண்டும் வருகிறார், வெறுப்பை அல்ல என்றும் அவரது சகோதரரும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு திரும்பும் வழியில் துபாய் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நவாஸ் ஷெரீப், "நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் பாகிஸ்தானுக்குச் செல்கிறேன். நான் பாகிஸ்தானை விட்டு வெளிநாடு செல்லும்போது எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. ஆனால் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நவாஸ் ஷெரிப்பின் வருகையை இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி விமர்சித்துள்ளது. தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி நவாஸ் ஷெரீப்பை நாடு திரும்புவதற்கு வழிவகுத்ததன் மூலம் பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சி, நாட்டின் சட்ட அமைப்பை முற்றிலும் அழித்துவிட்டது என இம்ரான் கானின் பிடிஐ கட்சி விமர்சித்துள்ளது.
"பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியான நவாஸ் ஷெரீப், நாட்டில் சுற்றித் திரிவதற்கு அனுமதி பெற்றுள்ளார். ஆனால், மக்கள் அவரையும் அவரது கட்சியையும் நிராகரித்துள்ளதால், அனுமதிச்சீட்டு வழங்குவது ஒருபோதும் உதவாது என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்று இம்ரான் கானின் பிடியை கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மூனிஸ் எலாஹி விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications