ஊசி மூலம் குழந்தையைக் கொல்ல முயன்ற சீனத் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறை
பெய்ஜிங்: தனது மனைவியின் நடத்தை மீது கொண்ட சந்தேகத்தால் தனது இரண்டு மாதக் குழந்தையைக் கொல்ல முயன்ற கொடூரத் தந்தைக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சீன நீதிமன்றம்.
சீனாவைச் சேர்ந்த யின் ஜிய்கி என்ற நபருக்கு தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மனைவி பிரசவித்த அவர்களது இரண்டு மாதக் குழந்தை தன்னுடையது அல்ல என யின் கருதியுள்ளார். எனவே, அக்குழந்தையைக் கொல்வது என அவர் தீர்மானித்துள்ளார்.
அதன்படி, அக்குழந்தையின் உடலில் ஒரு ஊசியைச் சொருகி உள்ளார். இதனால் குழந்தை தொடர்ந்து அழுதுள்ளது. கணவரின் சதிச் செயலை அறியாத அவரின் மனைவி, உடனடியாக குழந்தையை மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.
அங்கு அறுவைச் சிகிச்சை மூலம் அந்த ஊசி அகற்றப் பட்டுள்ளது. பின்னர் குழந்தை ஆரோக்கியமாக வீட்டிற்குத் திரும்பியுள்ளது. ஆனபோதும், மனைவி மீது கொண்ட சந்தேகம் மாறாத யின், மீண்டும் தனக்குக் கிடைத்தச் சந்தர்ப்பத்தில் குழந்தையின் உடலில் மார்பு உள்ளிட்ட இடங்களில் 3 ஊசிகளைக் குத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அக்குழந்தைக்கு தகுந்த அறுவைச் சிகிச்சைகள் செய்யப் பட்ட போதும், ஊசிகள் ஆழமாக பாய்ந்திருப்பதால் உடல் உறுப்புகள் பாதிக்கப் பட்டன. அதனைத் தொடர்ந்து கைது செய்யப் பட்ட யின், போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் யின்னுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மேலும், குழந்தைக்கு நடத்தப் பட்ட டி.என்.ஏ சோதனையில் குழந்தையின் தந்தை யின் தான் என்பது நிரூபிக்கப் பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications