ஆக.5ல் காஷ்மீருக்காக இம்ரான் கான் போட்ட 18 அம்ச திட்டம்.. துருக்கி, சீனா, மலேசியாவை வைத்து பிளான்
இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது பிரிவை இந்திய ரத்து செய்த ஆகஸ்ட் 5ம் தேதியை முதலாண்டு நினைவு நாளாக அணுசரிக்கும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 18ம் அம்ச திட்டத்தை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பபட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்தது. அரசியல் சாசன பிரிவு 370தை ரத்து செய்ததன் மூலம் மற்ற மாநிலங்களைப் போல் ஒரு மாநிலமாக ஜம்மு காஷ்மீரும் மாறியது.
அத்துடன் ஜம்மு-காஷ்மீர், மற்றும் லடாக் ஆகிய இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டது. இந்த சட்டம் இந்த ஆகஸ்ட் 5 அன்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டது. அடுத்த நாள் லோக்சபாவிலும் ஆகஸ்ட் 9 அன்று ஜனாதிபதியின் ஒப்புதல் பெற்றது. மத்திய அரசின் இந்த சட்டத்தால் இந்தியாவைச் சேர்ந்த எவரும் காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். இதேபோல் இந்தியாவில் உள்ள அனைத்த சட்டங்களும் காஷ்மீருக்கும் பொருந்தும்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,972 பேருக்கு கொரோனா- ஒரே நாளில் 88 பேர் உயிரிழப்பு
படைகள் குவிப்பு
சட்டத்தை நிறைவேற்றும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் படைகளை குவித்து தகவல்தொடர்பை துண்டித்து, உயர் அரசியல் தலைவர்களை தடுப்பு காவலில் வைத்தது மத்திய அரசு. ஆனால் பின்னாளில். அவர்களில் பெரும்பாலோர் விடுவிக்கப்பட்டனர்; PDP கட்சி தலைவர் மெஹபூபா முப்தி, பரூக் அப்துல்லா உள்ளிட்ட சிலர் மட்டுமே விடுவிக்கப்படவில்லை.
இம்ரான்கான் மிரட்டல்
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் பாகிஸ்தான் கடும் கோபம் அடைந்தது. அத்துடன் இந்திய அரசு 370 வது பிரிவை ரத்து செய்வதற்கு எதிராக சர்வதேச அளவில் பிரச்சாரத்தை ஆரம்பித்தது. காஷ்மீர் தொடர்பாக கடந்த செப்டம்பரில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கடுமையாக பேசினார். காஷ்மீரில் ஒரு "இரத்தக் குளியல்" நடக்கும் என எச்சரித்தார். காஷ்மீர் பள்ளத்தாக்கின் தெருக்களில் ஒரு இனப்படுகொலை நடைபெறுவதாக குற்றம்சாட்டினார். மற்றும் பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை அடிக்கடி குறிப்பிட்டு இந்தியாவை நேரடியாகவே மிரட்டினார். ஆனால் இதற்கு இந்தியா அங்கேயே கடும் பதிலடி கொடுத்தது.
பிரச்சாரம்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு 370வது பிரிவை இந்தியா ரத்து செய்த ஆகஸ்ட் 5ம் தேதியை முதலாண்டு நாளாக நினைவு தினமாக கூறும் விதமாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 18ம் அம்ச திட்டத்தை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஸ்ஐ உடன் இணைந்து செயல்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஐஎஸ்ஐ அமைப்பு இந்தியாவில் தீவிரவாத செயல்களை மறைமுகமாக ஊக்குவித்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்வதையே தனது சாதனையாக கருதி வரும் இம்ரான் கான் ஆகஸ்ட் 5ம்தேதி அன்று பாகிஸ்தான் ஆக்கிரிமிப்பு காஷ்மீரில் இநதியாவிற்கு எதிராக பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இம்ரான்கான் பேசுகிறார்
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் 18 அம்ச திட்டப்படி, ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீருக்கு இம்ரான் கான் பயணம் செய்ய உள்ளாராம். அங்குள்ள சட்டசபையில் அவர் உரையாற்ற தற்காலிகமாக திட்டமிடப்பட்டுள்ளது. இந்த உரையை நேரடியாக ஒளிபரப்பாக போகிறது. அவர் முசாபராபாத்தை அடைவதற்கு முன்பு, இம்ரான் கானின் அரசாங்கம் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிக்கு சென்று வர அனுமதி அளிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த காலங்களைப் போலவே, ஐ.எஸ்.ஐ நிதியளிக்கும் பயங்கரவாத பயிற்சி முகாம்களுக்கும் ஊடகவியலாளர்கள் சென்று வரும் வகையில் இந்த வசதி வரம்பற்றதாக இருக்குமாம்.
சீனா மலேசியாவிடம் ஆதரவு
இதனிடையே காஷ்மீர் விஷயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்த மலேசியா, துருக்கி, சீனாவிடம் ஆகஸ்ட் 5ம்தேதி ஆதரவான ஒரு அறிக்கையை பாகிஸ்தான் அரசு எதிர்பார்க்கிறது. 18 அம்ச திட்டத்தில் இதுவும் ஒன்றாம். இதன் மூலம் வலிமையான எதிர்ப்பை இந்தியாவுக்கு காட்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் விரும்புகிறாராம். குறைந்தபட்சம் ஆகஸ்ட் 5ம்தேதி இந்தியாவின் செயல்களை கண்டித்து அந்நாடுகள் டுவிட்டரில் கருத்து பதிவிட வேண்டும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறதாம். இதற்காக அந்த நாடுகளை அணுகி உள்ளதாம். அந்த நாடுகள் எந்த முடிவை எடுக்க போகின்றன என்பது ஆகஸ்ட் 5ம் தேதி தான் தெரியவரும்.