உக்ரைன்: ஐ.நா. பொதுச்சபை அவசர கூட்டத்துக்கான வாக்கெடுப்பையும் புறக்கணித்தது இந்தியா
ஜெனீவா: உக்ரைன் விவகாரம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்தை கூட்டுவது தொடர்பான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்துள்ளது. ஐ.நா.வில் உக்ரைன் பிரச்சனையில் நடத்தப்பட்ட 2 வாக்கெடுப்புகளையும் இந்தியா புறக்கணித்துள்ளது.
உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இந்த இடைவிடாத ரஷ்யாவின் யுத்தத்தால் பல லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்பதில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. போலந்து, ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளில் தஞ்சமடைந்த இந்தியர்கள் மீட்கப்பட்டு வருகின்றனர். இதுவரை 1500க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மேலும் மத்திய அமைச்சர்கள் குழுவும் உக்ரைனின் அண்டைநாடுகளுக்கு செல்ல உள்ளது.

உக்ரைன் -ரஷ்யா பேச்சுவார்த்தை
இன்னொரு பக்கம் உக்ரைனுடன் ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்த தயார் என அறிவித்துள்ளது. பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் இந்த பேச்சுவார்த்தைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பெலாரஸ் செய்துள்ளது.

ஐநா பொதுச்சபை அவசர கூட்டம்
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை, உக்ரைன் விவகாரம் தொடர்பான அவசர கூட்டத்தை கூட்டுகிறது. 1950-ம் ஆண்டுக்குப் பின் இப்படியான ஐநாவின் அவசர பொதுச்சபை கூடுவது 11-வது முறை. இது தொடர்பாக மரபுசார் வாக்கெடுப்பு ஒன்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நடத்தப்பட்டது.

இந்தியா, சீனா புறக்கணிப்பு
உக்ரைன் விவகாரத்துக்காக ஐ.நா. பொதுச்சபையின் அவசர கூட்டம் கூட்டப்படுவதற்கு எதிராக ரஷ்யா வாக்களித்தது. ஆனால் இந்தியா, சீனா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்தன. இது தொடர்பாக ஐ.நா.வில் பேசிய இந்திய பிரதிநிதி திருமூர்த்தி, உக்ரைனில் இப்போது மனிதாபிமான நடவடிக்கைகளைத்தான் மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் முதன்மையான பிரச்சனை இது. ஆகையால் வாக்கெடுப்பில் இருந்து விலகி நிற்கிறோம் என்றார்.
Recommended Video

2-வது முறையாக புறக்கணிப்பு
முன்னதாக கடந்த 26-ந் தேதி உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்துக்கு எதிராக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. உக்ரைன் நாட்டைவிட்டு ரஷ்யாவின் ராணுவம் வெளியேற வேண்டும் என ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் வலியுறுத்தியது. அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பையும் இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் விவகாரத்தில் ஐ.நா.வில் இதுவரையிலான 2 வாக்கெடுப்புகளையும் இந்தியா புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications