கோடி, கோடியாக கருப்பு பணம் கடத்தும் நாடுகளில் இந்தியாவுக்கு 5வது இடம்
வாஷிங்டன்: 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு இடையிலான காலத்தில் அதிகமாக கருப்பு பணம் வெளிநாடுகளுக்கு கடத்திய நாடுகளில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.
வாஷிங்டனைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான குளோபல் பைனான்ஷியல் இன்டெக்ரிட்டி கருப்பு பணம் குறித்த ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. கடந்த 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை எந்தெந்த நாடுகள் எவ்வளவு கருப்பு பணத்தை வெளிநாடுகளுக்கு கடத்தியுள்ளது என்று ஆய்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் அந்நிறுவனம் தனது ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு,
2011ல்
2011ம் ஆண்டில் மட்டும் 946.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கருப்பு பணம் வளரும் நாடுகளில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டுள்ளது. 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை மொத்தம் 5.9 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள கருப்பு பணம் கடத்தப்பட்டுள்ளது.
மந்தமான பொருளாதாரம்
உலக பொருளாதார நிலை மந்தமாக உள்ள நிலையில் கருப்பு பண கடத்தல் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வளரும் நாடுகளில் இருந்து கடத்தப்படும் கருப்பு பணத்தின் அளவு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்தியா
2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை அதிக கருப்பு பணம் கடத்திய நாடுகளில் 343.04 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடத்திய இந்தியா 5வது இடத்தில் உள்ளது. கடந்த 2011ம் ஆண்டில் மட்டும் 84.93 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள கருப்பு பணம் இந்தியாவில் இருந்து கடத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2011ம் ஆண்டில் அதிக கருப்பு பணம் கடத்திய நாடுகளில் இந்தியாவுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
சீனா
கடந்த 10 ஆண்டுகளாக அதிக கருப்பு பணம் கடத்தும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது சீனா தான்(1.08 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்). ரஷ்யா, மெக்சிகோ, மலேசியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
அதிகம் கடத்தும் நாடுகள்
கருப்பு பணத்தை அதிகமாக கடத்தும் நாடுகள் இவை தான். ஆசியாவில் சீனா, மலேசியா, இந்தியா, இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பைன்ஸ்; ஆப்பிரிக்காவில் நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா; ஐரோப்பாவில் ரஷ்யா, பெலாரஸ், போலந்து மற்றும் செர்பியா ஆகியவை அதிகம் கருப்பு பணம் கடத்தும் நாடுகள். இவை தவிர மெக்சிகோ, பிரேசில் மற்றும் ஈராக்கும் அதிக அளவில் கருப்பு பணம் கடத்தும் நாடுகள் ஆகும்.