இந்தியா நோக்கி வந்த கப்பலுக்கு பெரிய சிக்கல்.. நடுக்கடலில் அலறிய கேப்டன்! வேலையை காட்டிய ஈரான்
தெஹ்ரான்: ஓமன் வளைகுடாவில் இந்தியா நோக்கி வந்த, கண்டெய்னர் கப்பல் ஒன்று பெரிய சிக்கலில் மாட்டியிருக்கிறது. ஏற்கெனவே வளைகுடா பகுதிகளில் பதற்றம் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த சம்பவம் இந்தியாவை கவலையடைய செய்திருக்கிறது.
ஓமன் வளைகுடா என்பது ஈரானிலிருந்து வெளியே வரும் வழி. வளைகுடா நாடுகளிலிருந்து வரும் கப்பல்கள் இப்படிதான் வெளியேற வேண்டும். அப்படி வந்துக்கொண்டிருந்த ஒரு கப்பல் மீது ஈரானின் புரட்சிகர காவல் படை தாக்குதல் நடத்தியிருக்கிறது.

என்ன நடந்தது?
ஓமன் நாட்டிற்கு வடகிழக்கே சுமார் 15 கடல் மைல் தொலைவில் பனாமா நாட்டு கொடியுடன் இந்த கப்பல் வந்துக்கொண்டிருந்தது. ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து சரக்குகளை ஏற்றிக்கொண்டு இந்த கப்பல் புறப்பட்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக ஈரானின் புரட்சிகர காவல் படையை சேர்ந்த தாக்குதல் படகு வழிமறித்தது.
தூப்பாக்கிச்சூடு
கப்பலை நோக்கி நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் கப்பலின் மேல் தளம் சேதமடைந்திருக்கிறது. இதை கொஞ்சமும் எதிர்பாராத கப்பலின் கேப்டன் உதவி கேட்டு அலறியிருக்கிறார். அதே நேரம் கப்பலை எங்கும் நிறுத்தாமல் இயக்கியிருக்கிறார். இதனால், அந்த படகால் கப்பலை கைப்பற்ற முடியவில்லை. இந்த சம்பவத்தில் நல்வாய்ப்பாக கப்பலில் இருந்த ஊழியர்கள் யாரும் காயமடையவில்லை. இதனை பிரிட்டனின் கடல்சார் வர்த்தக அமைப்பு உறுதி செய்திருக்கிறது.
கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO மற்றும் லாயிட்ஸ் லிஸ்ட் போன்ற தளங்கள், இந்தக் கப்பல் தனது பயணத்தை அமீரகத்தில் தொடங்கி கிழக்கு நோக்கி அதாவது இந்தியத் துணைக் கண்டம் நோக்கி அமைத்திருந்ததாகத் தெரிவிக்கின்றன.
தாக்குதலுக்கு காரணம்
ஈரான்-அமெரிக்கா இடையே பதற்றம் அதிகரித்திருக்கிறது. ஈரானின் துறைமுகங்களை அமெரிக்கா முற்றுகையிட்டு இருப்பதால், ஹார்முஸ் நீரிணையில் பதற்றம் அதிகரித்திருக்கிறது. போதாத குறைக்கு ஈரானின் சரக்கு கப்பல் ஒன்றை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியிருந்தது. இதெல்லாம் ஈரானை டென்ஷன் ஆக்கியிருப்பதால் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த பின்னணியில்தான் பனாமா நாட்டு கொடியுடன் பயணித்த கப்பல் தாக்கப்பட்டிருக்கிறது.
ஈரானில் ஏவுகணை ஊர்வலம்
சர்வதேச கடல் பகுதியில் இப்படியான சம்பவம் நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், மறுபுறம் ஈரான் தனது ராணுவ வலிமையை மக்களுக்கு வெளிப்படுத்தி வருகிறது. அதாவது இஸ்ரேலை தாக்க பயன்படுத்திய ஏவுகணையை ஊர்வலமாக கொண்டு சென்று பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தியிருக்கிறது.
செவ்வாய்க்கிழமை இரவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புரட்சிகர காவல் படையினர் பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அதில் மொபைல் லாஞ்சர் மூலம் ஏவபடக்கூடிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை பொதுவெளியில் காட்சிப்படுத்தினர். இது 'கத்ர்' (Qadr) வகை ஏவுகணை என சொல்லப்படுகிறது. கிளஸ்டர் வெடிகுண்டுகளை ஏவும் திறன் கொண்ட இந்த வகை ஏவுகணைகளைத் தான், கடந்த காலங்களில் இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது ஈரான் பயன்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.














Click it and Unblock the Notifications