சர்வதேச அரங்கில் உயர்ந்து நிற்கும் மோடி.. "இந்தியாவால் மட்டுமே முடியும்.." சொல்வது இத்தாலி பிரதமர்
ரோம்: ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஆண்டுக் கணக்கில் தொடரும் நிலையில், அதை முடிவுக்குக் கொண்டு வர பல நாடுகள் முயன்று வருகின்றன. இதற்கிடையே இந்த மோதலை இந்தியா, சீனா போன்ற நாடுகளால் மட்டுமே முடிவுக்குக் கொண்ட வர முடியும் என இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான மோதல் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. இந்த மோதல் தொடங்கிய போது ரஷ்யா கை ஓங்கி இருந்தது. ஆனால், அதன் பிறகு போர் மாதக் கணக்கில் தொடர்ந்தே வருகிறது.

உக்ரைன் மோதல்: இதில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக மேற்குலக நாடுகள் ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதன் காரணமாகவே ரஷ்யாவால் இந்த போரில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. உக்ரைன் மோதல் காரணமாக ரஷ்யா மீது பல பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விதித்துள்ளன. சர்வதேச பொருளாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போரை முடிவுக்குக் கொண்டு உலக நாடுகள் தொடர்ந்து முயன்று வருகின்றன. இந்தச் சூழலில் தான் உக்ரைன் மோதலை இந்தியாவால் மட்டுமே முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று பேசியிருக்கிறார் இத்தாலி பிரதமர்.
வடக்கு இத்தாலியின் செர்னோபியோ நகரில் உள்ள அம்ப்ரோசெட்டி மன்றத்தில் கருத்தரங்கு கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை இத்தாலி பிரதமர் மெலோனி நேரில் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து அங்குப் பேசிய அவர், இந்தியா சீனா போன்ற நாடுகளால் மட்டுமே உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்றார்.
இந்தியாவால் மட்டுமே முடியும்: இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "சர்வதேச சட்ட விதிகள் மீறப்பட்டால், உலகில் குழப்பமான நெருக்கடியான சூழல் உருவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் புவிசார் பதற்றங்களுடன் சர்வதேச பொருளாதார குழப்பங்களும் ஏற்படுகிறது. சீன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தும் போது நான் இதைத்தான் சொன்னேன். சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளால் மட்டுமே உக்ரைன் மோதலைத் தீர்க்க முடியும் என்று நான் ஏன் நினைக்கிறேன்" என்றார்.

முன்னதாக ரஷ்ய அதிபர் புதினும் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தார். அவரும் இந்தியா, சீனா போன்ற நாடுகளால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய மடியும் எனக் கூறிருந்தார். புதின் இந்தக் கருத்துகளைக் கூறி 48 மணி நேரத்திற்குள் கிட்டதட்ட அதே கருத்துகளை இத்தாலிய பிரதமரும் இப்போது கூறியிருக்கிறார்.
என்ன சொன்னார்: விளாடிவோஸ்டாக் நகரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் புதின், "ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறது. கடந்த 2022இல் ரஷ்யா உக்ரைன் இடையே போடப்பட்ட முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் போர் நிறுத்தம் இருக்க வேண்டும். இந்தியா, சீனா போன்ற நாடுகளால் மட்டுமே மத்தியஸ்தம் செய்ய முடியும்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் ரஷ்யா மோதல் தொடங்கிய போது ரஷ்யா கை ஓங்கி இருந்தது. அப்போது இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், முக்கிய ஒப்பந்தத்தில் முதற்கட்ட புரிதல் ஏற்பட்டது. இருப்பினும், அந்த ஒப்பந்தத்தில் என்ன இருந்தது என்பது பொதுவெளியில் அறிவிக்கப்படவில்லை. அது கடைசி வரை நடைமுறைக்கும் வரவில்லை. ஆனால், அதன் அடிப்படையிலேயே போர் நிறுத்தம் இருக்க வேண்டும் என புதின் கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications