மீண்டும் படைகளை குவிக்கும் சீனா.. கிழக்கு லடாக்கில் பதற்றம்.. பதிலுக்கு படைகளை களமிறக்கிய இந்தியா!
லடாக்: கிழக்கு லடாக் பகுதியில் சீனா ராணுவம் மீண்டும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் சீனாவின் பயிற்சி முகாம்களில் கூடுதல் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
Recommended Video
இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கடந்த வருடம் மே மாதத்தில் இருந்தே நடந்து வருகிறது. பாங்காக் திசோ மோதல், கல்வான் மோதல் என்று கடந்த வருடம் முழுக்கவே லடாக் எல்லை பரபரப்பாக இருந்தது. அதன்பின் மோதலை தணிக்கும் வகையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.
பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் பாங்காங் திசோவில் சில "பிங்கர்" பகுதிகளில் இருந்தும், கல்வான் பகுதியில் மோதல் நிலவிய இடங்களில் இருந்து இரண்டு நாட்டு ராணுவமும் பின்வாங்க ஒப்புக்கொண்டது. ஆனால் மற்ற இடங்களில் இன்னும் இரண்டு நாட்டு ராணுவம் அப்படியே உள்ளது.
சீனா
அதிலும் சீனா தனது பாரம்பரியமான ரோந்து பகுதிகளை தாண்டி, தற்போது கோக்ரா மலை அருகிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ், டெஸ்பாங், சிஎன்என் ஜங்சன் ஆகிய பகுதிகளிலும் இன்னும் முகாம்களை அமைத்து உள்ளது. இந்த பகுதிகள் வழியாக எளிதாக இந்தியாவிற்குள் நுழைய முடியும். இங்கு கடந்த வருட இறுதியில் படைகளை குறைத்துக்கொள்ள மட்டும் சீனா சம்மதித்தது.
சம்மதம்
ஆனால் மொத்தமாக இங்கிருந்து சீனா படைகளை வாபஸ் வாங்கவில்லை. சீன ராணுவத்தின் முகாம்கள் இன்னும் இங்கு உள்ளன. இந்த பகுதிகளில்தான் தற்போது கூடுதல் படைகளை சீனா களமிறக்கி வருகிறது. கோக்ரா மலை அருகிலும், ஹாட் ஸ்பிரிங்ஸ், டெஸ்பாங், சிஎன்என் ஜங்சன் பகுதிகளில் சீனா கூடுதல் படைகளை களமிறக்க தொடங்கி உள்ளது.
அர்த்தம்
இதன் அர்த்தம் சீனா இங்கிருந்து படைகளை வாபஸ் வாங்கும் எண்ணத்தில் இல்லை என்பதே. இதனால் தற்போது இந்தியாவும் இங்கு கூடுதல் படைகளை குவித்து வருகிறது. சீனா இங்கு படைகளை குவிப்பதால், இந்தியாவும் எச்சரிக்கையாக இருக்கும் வகையில் கூடுதல் படைகளை களமிறக்கி உள்ளது. அங்கு தீவிர கண்காணிப்பு பணிகளை இந்திய மேற்கொண்டு வருகிறது.
லடாக்
இதில் சீனா இந்தியா படைகளுக்கு இடையே சில இடங்களில் 10 கிமீ இடைவெளி கூட இல்லை, சில இடங்களில் 75 கிமீ தூரம் வரை இடைவெளி உள்ளது. இந்த பகுதிகள் எல்லாம் 2020ல் சீனா ஊடுருவ முயன்ற, மோதல் நடந்த பகுதிகள் ஆகும். இதனால் தற்போது சீனா இங்கு படைகளை குவித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது