இந்தியாவுடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்.. ஐரோப்பிய யூனியன் நம்பிக்கை.. ஏன் முக்கியம் தெரியுமா?
டாவோஸ்: அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்து அதிரடியாக வரி விதித்து வருகிறார். டிரம்பின் வரி விதிப்பால் சர்வதேச அளவில் பொருளாதார தாக்கங்கள் ஏற்பட்டு இருக்க நிலையில், இந்தியாவுடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள ஐரோப்பிய யூனியன் ஆயத்தமாகி வருகிறது. அடுத்த வாரம் ஐரோப்பிய யூனியன் தலைவர் இந்தியா வர உள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனத்தெரிகிறது.
டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் (WEF) பேசிய உர்சுலா வான் டெர் லேயன் இது தொடர்பாக கூறியதாவது:- இந்தியாவும் ஐரோப்பிய யூனியனும் "வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில்" உள்ளன. இது உலக வர்த்தகம் மற்றும் விநியோகச் சங்கிலிகளை மறுவடிவமைக்கும் ஒப்பந்தமாக இருக்கும்.

வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தம்
வரிவிதிப்பிற்குப் பதிலாக நியாயமான வர்த்தகம், சுரண்டலுக்குப் பதிலாக நிலைத்தன்மை என்பதே இதன் இலக்காக இருக்கும். உலக வளர்ச்சி மையங்களுடனான உறவுகளை ஆழப்படுத்துவதன் மூலம், ஐரோப்பிய ஒன்றியம் தனது பொருளாதார அபாயங்களைக் குறைத்து, விநியோகச் சங்கிலிகளைப் பன்முகப்படுத்த உறுதியாக உள்ளது.
டாவோஸுக்குப் பிறகு, அடுத்த வார இறுதியில் நான் இந்தியாவுக்குப் பயணம் செய்கிறேன். இன்னும் சில பணிகள் உள்ளன. எனினும், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வர்த்தக ஒப்பந்தத்தின் விளிம்பில் நாம் இருக்கிறோம். சிலர் இதை அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என்றும் அழைக்கிறார்கள்.
உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதி
இந்த ஒப்பந்தம் சுமார் இரண்டு பில்லியன் மக்களைக் கொண்ட ஒரு கூட்டுச் சந்தையை உருவாக்கும். மேலும், இது உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பகுதிக்கு மேல் பங்களிக்கும். இதன் மூலம், உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பிராந்தியத்தில், ஐரோப்பிய நிறுவனங்களுக்கு சாதகமானதாக இருக்கும். உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவோடு இணைவதன் மூலம் ஐரோப்பாவிற்கு முதலாவதாக நுழைந்தவர் என்கிற லாபம் கிடைக்கும் என்றார்.
இந்திய குடியரசு தினத்தன்று
வரும் 26 ஆம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக ஐரோப்பிய ஆணையர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ லூயிஸ் சந்தோஸ் டா கோஸ்டா பங்கேற்கின்றனர். எனவே இந்தப் பயணத்தின் போது, அதாவது 26-ம் தேதி தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா - ஐரோப்பிய யூனியன் இடையேயான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை 2007-ல் தொடங்கப்பட்டு 2013-ல் கைவிடப்பட்டது. அதன்பிறகு 2022 ஜூலை முதல் மீண்டும் இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியது. அமெரிக்கா நடத்தும் வரிப் போருக்கு நடுவே, மேற்கூறிய விவகாரம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications