2016-ல் சார்க் நாடுகளுக்கான செயற்கைக் கோளை இந்தியா ஏவும்: காத்மாண்டு மாநாட்டில் பிரதமர் மோடி
காத்மாண்டு: சார்க் நாடுகள் பயனடையும் வகையில் 2016ஆம் ஆண்டு இந்தியா செயற்கைக் கோளை விண்ணில் ஏவும் என்று நேபாளத் தலைநகர் காத்மாண்டு மாநாட்டில் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
தெற்காசிய நாடுகள் இடம்பெற்றுள்ள 'சார்க்' அமைப்பின் மாநாடு நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இன்று தொடங்கியது. இன்றைய மாநாட்டின் தொடக்கத்தில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார். அவர் தமது உரையில் சார்க் நாடுகளிடையே மோதல் போக்கு வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
அதன் பின்னர் பேசிய இலங்கை அதிபர் ராஜபக்சே, மனித உரிமை மீறல்களை சில வெளிநாட்டு சக்திகள் அரசியல் ஆயுதங்களாக பயன்படுத்துகின்றன என்று கூறினார். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவோ வறுமையைப் போக்குவத் குறித்து உரையாற்றினார்.
பின்னர் சார்க் மாநாட்டில் முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
இந்தியாவுக்காக நான் காணும் கனவானது இந்த ஒட்டுமொத்த பிராந்தியத்தின் எதிர்காலத்துக்குமானதாகும். 3 ஆண்டுகளுக்கு முன்னர் சார்க் மாநாடு நடைபெற்றது. இங்கே உள்ள பிரதமர் ஷேக் ஹசீனா, இலங்கை அதிபர் ராஜபக்சே இருவர்தான் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர். இவர்களில் ஷேக் ஹசீனா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ராஜபக்சே மீண்டும் ஒரு முறை தேர்வாக இருக்கிறார்.
தெற்காசிய நாடுகளைப் பொறுத்தவரை அண்டை நாடுகளுடன் நல்லுறவு மிகவும் அவசியம். சார்க் நாடுகள் என்றாலே வெறுப்புணர்வு என்ற நிலை உருவாவதற்கு பதிலாக நாம் அனைவரும் நம்மிடையே கற்றுக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.
இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் பெருமளவு முதலீடு செய்கின்றன. ஆனால் சார்க் நாடுகளிலோ இந்திய நிறுவனங்களின் முதலீடு மிகக் குறைவாகத்தான் இருக்கின்றன.
இலங்கை, மாலத்தீவு, வங்கதேசம், நேபாளம் என அண்டை நாடுகளுடன் இந்தியாவுக்கு நல்லுறவு இருக்கிறது. சார்க் நாடுகள் இன்னமும் நெருக்கமாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
சார்க் நாடுகளில் இணையதள பயன்பாடு 10%க்கும் குறைவாகவே இருக்கிறது. இளைஞர்களின் எதிர்மறை சிந்தனையால் சார்க் நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
சார்க் நாடுகள் இயற்கை வளங்களை பயன்படுத்தி தொழிற்சாலைகளை அதிகரிக்க வேண்டும். இந்திய சந்தைக்கான பொருட்களை பிற சார்க் நாடுகள் உற்பத்தி செய்ய வேண்டும்.
கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க சூரிய மின்சக்தியை பயன்படுத்த வேண்டும். சார்க் நாடுகள் சுற்றுலாவை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும்.
சார்க் நாடுகளைச் சேர்ந்த நோயாளிகளுக்கும் அவர்களுக்கு உதவியாக வருவோருக்கும் உடனடி மருத்துவ விசா வழங்கப்படும். ஆன்லைன் பாடத்திட்டங்கள் மூலமாக சார்க் நாடுகளின் மாணவர்களை ஒருங்கிணைக்க இந்தியா தயாராக இருக்கிறது.
சார்க் நாடுகளிடையே போக்குவரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். சார்க் நாடுகளிடையே வான்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க வேண்டும்.
2016-ல் சார்க் நாடுகளுக்கு அன்பளிப்பாக செயற்கைக் கோளை இந்தியா விண்ணில் ஏவும். இயற்கைப் பேரிடம் மேலாண்மை உள்ளிட்டவைகளில் இந்த செயற்கைக் கோள் பெரிதும் உதவிகரமாக இருக்கும். அதேபோல் ஒவ்வொரு சார்க் நாட்டிலும் தெற்காசிய பல்கலைக் கழகங்களை அமைக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் போன்ற பயங்கரவாத தாக்குதல்கள் நிகழாமல் தடுக்க சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியமாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.