146 கோடியை தொட்ட இந்திய மக்கள் தொகை.. ஐநா அறிக்கை.. கூடவே சொன்ன இன்னொரு முக்கியமான மேட்டர்
வாஷிங்டன்: ஐக்கிய நாடுகள் சபையின் (UNFPA) புதிய புள்ளிவிவர அறிக்கையின்படி, இந்தியாவின் மக்கள்தொகை 2025 ஆம் ஆண்டில் 146 கோடியாக இருக்கும் என்றும், இது உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடாகத் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டின் மொத்த கருவுறுதல் விகிதம் எதிர்பார்க்கப்பட்ட அளவை விடக் குறைந்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
ஐநாவின் யுஎன்எப்பிஏ அமைப்பின் 2025 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை (State of World Population - SOWP) அறிக்கையின்படி, இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.9 குழந்தைகள் என்ற அளவில் குறைந்துள்ளது. இது, ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு மக்கள்தொகை மாறாமல் இருக்கத் தேவையான 2.1 என்ற எண்ணிக்கையை விடக் குறைவு ஆகும். இதன் பொருள் என்னவென்றால், சராசரியாக, இந்தியப் பெண்கள் தங்கள் இனத்தை தக்க வைக்கத் தேவையான குழந்தைகளை விடக் குறைவான குழந்தைகளையே பெற்றுக்கொள்கிறார்கள் என்பதேயாகும்.

இந்திய மக்கள் தொகை
கருவுறுதல் விகிதம் குறைந்து வந்தாலும், இந்தியாவின் இளைஞர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் 24% பேர் 0-14 வயதுக்குட்பட்டவர்களாகவும், 17% பேர் 10-19 வயதுக்குட்பட்டவர்களாகவும், 26% பேர் 10-24 வயதுக்குட்பட்டவர்களாகவும் உள்ளனர்.
இந்தியாவின் மக்கள் தொகையில் 68% பேர் வேலை செய்யும் வயதில் (15-64 வயது) உள்ளனர். தகுந்த வேலை வாய்ப்புகள் மற்றும் கொள்கை ஆதரவு இருந்தால் பொருளாதார வளர்ச்சி அளவிலும் இது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.
ஆண், பெண் ஆயுட்காலம் கணிப்பு
வயதானவர்களின் எண்ணிக்கை (65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்) தற்போது 7 சதவீதமாக உள்ளது. ஆயுட்காலம் அதிகரிப்பதால் இந்த எண்ணிக்கை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டின் கணக்கின்படி, பிறக்கும்போது ஆண்களின் ஆயுட்காலம் 71 ஆண்டுகளாகவும், பெண்களின் ஆயுட்காலம் 74 ஆண்டுகளாகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவின் மக்கள் தொகை 146 கோடியாக உள்ளதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.
இந்தியா தற்போது உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக உள்ளது. ஏறக்குறைய 150 கோடி மக்களைக் கொண்டுள்ளது. இன்னும் 40 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 170 கோடியாக உயர்ந்து பின்னர் குறையத் தொடங்கும் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த கால மக்கள் தொகை
1960 ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை சுமார் 43.6 கோடியாக இருந்தபோது, ஒரு பெண் சராசரியாக ஆறு குழந்தைகளை பெற்றுள்ளார். ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், கல்வி மேம்பாடு அடைந்துள்ளது. குழந்தை பெற்றுக்கொள்வதற்கான சுகாதார வசதிகள் அதிகரித்துள்ளன. மேலும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் அதிகாரத்தையும் பெற்றுள்ளனர். இதன் விளைவாக, இந்தியாவில் ஒரு பெண் சராசரியாக இரண்டு குழந்தைகளைப் தற்போது பெற்று எடுக்கிறார்.
இதுகுறித்து UNFPA இந்தியாவின் பிரதிநிதி ஆண்ட்ரியா எம். வோஜ்னர் கூறுகையில், "இந்தியாவில் கல்வி மற்றும் இனப்பெருக்க சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டதன் காரணமாக 1970 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணுக்கு கிட்டத்தட்ட ஐந்து குழந்தைகள் என்ற எண்ணிக்கையிலிருந்து இன்று சுமார் இரண்டு குழந்தைகளாக கருவுறுதல் விகிதத்தை குறைப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
வயதானவர்களின் எண்ணிக்கை அதிகம்
இதன் விளைவாக, மகப்பேறு இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும், மாநிலங்கள், சாதிகள் மற்றும் வருமானக் குழுக்களிடையே ஏற்றத்தாழ்வுகள் இன்னும் ஆழமாக உள்ளன" என்றார். இந்தியாவில் கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருவது ஒரு நல்ல அறிகுறியாக பார்க்கப்பட்டாலும், இளைஞர் மற்றும் உழைக்கும் வயதுடையோரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும்.
அதே நேரத்தில், வயதானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால், அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.












Click it and Unblock the Notifications