நீளும் வெறுப்புணர்வு.. ராமர் கோயிலையும் விடலயே.. இந்தியாவுக்கு வந்த கோபம்.. கனடாவுக்கு பறந்த கண்டனம்
கடந்த 2019ம் ஆண்டு தொடங்கி 2021ம் ஆண்டு வரை இந்த தாக்குதல் சம்பவங்கள் சுமார் 72 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
ஒட்டாவா: கனடாவில் ராமர் கோயில் ஒன்று மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்ட நிலையில், இதற்கு இந்தியா கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. மட்டுமல்லாது இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
கனடா நாட்டில் கடந்த சில நாட்களாக இந்து கோயில்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகின்றன. தற்போது இதன் தொடர்ச்சியாக மிசிசாகா நகரில் ராமர் கோயிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இக்கோயிலில் பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டுள்ளதோடு, சில பகுதிகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு முன்னர் இதேபோல அனுமன் கோயில் தொடங்கி கௌரி சங்கர் கோயில்கள் வரை தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த வாரம் பிராம்ப்டனில் உள்ள பாரத் மாதா கோயிலின் சில பகுதிகளை சேதப்படுத்திவிட்டு அங்கிருந்த உண்டியலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அதேபோல கடந்த மாதம் பிராம்ப்டனில் உள்ள கௌரி சங்கர் கோயில் சுவரில் பிரதமர் மோடிக்கு எதிராக சில வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து இந்த பிரச்னையை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் தரப்பில் அழுத்தம் தரப்பட்டது.

கண்டனம்
இது குறித்து இந்திய வம்சாவளி எம்பியான சந்திர ஆர்யா, "இந்த குற்ற சம்பவங்கள் தீவிரமானதாக இருக்கிறது" என்று ட்வீட் செய்திருந்தார். மேலும், "பிரம்டனில் உள்ள கௌரி சங்கர் கோயில் மற்றும் இதர இந்து கோயில்கள் மீதும், இந்துக்களின் நம்பிக்கை மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்கள் சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. சமூக ஊடகங்களிலும் இந்த வெறுப்பு பிரசாரம் தொடர்ந்து வருகிறது" என்று கூறியிருந்தார். கௌரி சங்கர் கோயிலை போலவே கடந்த மாதம் 15ம் தேதியன்று பிராம்ப்டனில் உள்ள அனுமான் கோயிலிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதல்கள்
கடந்த 2019ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை இது போன்ற குற்ற சம்பவங்கள் சுமார் 72% வரை அதிகரித்துள்ளதாக கனடாவின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த வரிசையில் அரங்கேறிய மற்றொரு சம்பவம்தான் மிசிசாகா நகர் ராமர் கோயில் தாக்குதல் சம்பவம். இதற்கு டொராண்டோவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில், "இச்சம்பவத்தை கண்டிப்பதுடன் இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தகிறோம்" எனக் கூறியிருந்தது.

நடவடிக்கை
விவகாரம் பெரியதாக வெடித்த நிலையில், "ராமர் கோயில் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் வருத்தமளிக்கிறது. மர்ம நபர்கள் கோயிலின் பின்புறத்தில் உள்ள சுவர்களில் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வாசகங்களை எழுதியுள்ளனர். இது போன்ற சம்பவங்களுக்கு பீல் பிராந்தியத்தில் இடமில்லை" என்று பிராம்ப்டன் மேயர் பேட்ரிக் பிரவுன் கூறியுள்ளார். இவரையடுத்து, "இப்பிரச்னை தீவிரமானதாக கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

காவல்துறை
மத சுதந்திரம் கனடாவில் அனைவருக்கும் உள்ள அடிப்படை உரிமை. எனவே இதனை பாதுகாக்க எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம்" என்று பீல் பிராந்திய காவல்துறையின் தலைவர் நிஷான் துரையப்பா கூறியுள்ளார். இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து சுமார் 6 கோயில்கள் மீது இதுபோன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் இப்பிரச்னை கனடாவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications