காசு, பணம், துட்டு... அமெரிக்காவில் லாட்டரி விற்ற இந்தியருக்கு ‘ஜாக்பாட்’... ரூ. 6.75 கோடி பரிசு!
வாஷிங்டன்: அமெரிக்காவில் லாட்டரி சீட்டு விற்ற இந்தியர் ஒருவருக்கு சுமார் ஆறு கோடி ரூபாய் பரிசாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், சைனோல்ஸ் பகுதியில் வீட்டு உபயோகப்பொருட்கள் கடை நடத்தி வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல்பீர் அத்வால். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவரான இவர், 1980-களில் அமெரிக்காவில் குடியேறினார்.
இவர் தனது கடையில் லாட்டரி சீட்டுகளையும் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில், சமீபத்தில் அங்கு 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான ஜாக்பாட் பரிசுகளுக்கான லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலுக்கான பரிசு சீட்டுகளை பல்பீர் அத்வால் விற்பனை செய்து வந்தார். இதன் இந்திய மதிப்பு சுமார் ரூ.10 ஆயிரத்து 720 கோடி ஆகும்.

அதிர்ஷ்டவசமாக பல்வீர் விற்பனை செய்த லாட்டரி சீட்டு ஒன்றிற்கு ஜாக்பாட் அடித்தது. அதனைத் தொடர்ந்து, அந்த பரிசு சீட்டை விற்பனை செய்த சில்லறை விற்பனையாளர் என்ற வகையில், அவருக்கு 10 லட்சம் டாலர் பரிசு போனசாக வழங்கப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.6.75 கோடி ஆகும்.
பரிசு பெற்ற சந்தோஷத்தில் பல்வீர் கூறுகையில், "எனது கடையில் விற்பனையான ஒரு லாட்டரி சீட்டுக்கு ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது என்ற தகவல், என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. என்னால் அதை முதலில் நம்ப முடியவில்லை. பின்னர் கவனமுடன் பார்த்து உறுதி செய்தேன்.
எனக்கு கிடைத்துள்ள போனஸ் தொகையில் ஒரு பகுதியை அறப்பணிகளுக்காக கொடுக்க திட்டமிட்டுள்ளேன். மீதியை என் குடும்பத்தினருடனும், ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்வேன். அமெரிக்கா, வாய்ப்புகளின் தேசம். இங்கு யார் வேண்டுமானாலும் வரலாம். தங்கள் கனவுகளை நனவாக்கி கொள்ளலாம்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்வீரின் மகள் சோனியா அத்வால் கூறுகையில், ‘தனது தந்தை 100 சதவீதம் இந்த பரிசுக்கு தகுதியானவர்' என்றார்.
பல்பீர் அத்வாலுக்கு பரிசு கிடைத்த வெற்றியை கொண்டாட அந்த நகரில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications