ஹூட் ஹூட் புயலால் நேபாளத்தில் கனமழை- பனிப்புயலில் சிக்கி இந்தியர் உள்பட 29பேர் பலி
காத்மாண்டு: நேபாளத்தில் வீசிய திடீர்ப் பனிப்புயலில் சிக்கி, அங்கு மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த ஒரு இந்தியர் உட்பட 29 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 85 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் உள்ள முஸ்டங்க் மாவட்டத்தில் உள்ள மலைப் பகுதியில் பல குழுவினர் மலையேற்றப் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென வீசிய பனிப்புயலில் அவர்கள் சிக்கிக் கொண்டனர்.

இதில், 9 நேபாள நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட 24 பேர் பலியானார்கள். மேலும், 19 பேர் காயமடைந்தனர்.
அதே நேரத்தில் மனான்ங் மற்றும் முஸ்டாங்க் எல்லையில் உள்ள தொரங்க் பாஸ் என்ற இடத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி நான்கு கனடா நாட்டைச் சேர்ந்தவர்களும், ஒரு இந்தியரும் உயிரிழந்தனர்.
இதனால் மொத்த பலியானவர்களின் எண்ணிக்கை 29 ஆனது. மேலும், பனிப்புயலில் சிக்கி 85 பேர் மாயமானதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து அப்பகுதியில் மீட்புப் பணியினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். நேபாள ராணுவமும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஆந்திராவைத் தாக்கிய ஹூட் ஹூட் புயலின் தாக்கத்தால் கடந்த சில தினங்களாக நேபாளத்திலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், அங்கு அடுத்தடுத்து பனிப்புயல் மற்றும் பனிச்சரிவு உள்ளிட்ட விபத்துக்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications