இந்திய சுதந்திர தின ஸ்பெஷல்: வரலாற்றில் முதல் முறையாக மூவர்ணத்தில் ஒளிரும் நயாகரா நீர்வீழ்ச்சி!
நயாகரா ஃபால்ஸ் (கனடா) : நயாகரா நீர்வீழ்ச்சியில் ஆகஸ்டு 15ம் தேதி இரவு 10 மணி முதல் பதினைந்து நிமிடங்களுக்கு இந்திய தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி இடம்பெறுகிறது. நயாகராவை இதற்கு முன் பல்வேறு நிறங்களில் ஒளிர வைத்தாலும், இந்திய தேசியக் கொடி நிறத்தில் ஒளிரவைப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
நயாகரா நீர்விழ்ச்சியில் ஆண்டு முழுவதும் இரவு நேரத்தில் ஒளிக்காட்சி உண்டு. அருவியின் மீது வண்ண விளக்குளால் ஒளி பாய்ச்சப்பட்டு, வண்ண வண்ண அருவி போல் காட்சி தரும். அதற்கு ஏற்றார்போல் இசையும் இசைக்கப்படும்.
குளிர் காலம், கோடை, இலையுதிர்காலம் என ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப இந்த ஒளிக்காட்சியின் நேரம் மாறுபடும். சிறப்புக் காரணங்களுக்காக, குறிப்பிட்ட வண்ணங்களில் ஒளிக்காட்சிக்கு அனுமதி உண்டு.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, செவ்வாய்கிழமை இரவு 10 மணி, அமெரிக்க கிழக்கு நேரப்படி இந்திய தேசியக் கொடியின் மூவர்ணத்தில் ஒளிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கனடா பகுதியில் உள்ள நயாகரா பூங்கா கமிஷன் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தகவலை கேட்டறிந்தோம். ஆமாம், நிச்சயம் மூவர்ண கொடி போல் ஒளிக்காட்சி உண்டு என்று உறுதி செய்தார்கள்.
இது ஏதாவது இந்திய அமைப்புகள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா என்று கேட்ட போது, அந்த தகவல் அரசு ரகசியம் சாரந்த விஷயம். ஆகையால் அது குறித்து விவரம் சொல்ல இயலாது என்று தெரிவித்தார்கள்.
யார் வேண்டுமானாலும் பணம் செலுத்தி இத்தகைய காட்சிக்கு ஏற்பாடு செய்யலாமா என்று கேட்டோம். இல்லை, தக்க காரணங்களுடன் அணுகுபவர்களுக்கு, அரசின் நடைமுறைப்படி ஆராய்ந்து உரிய அனுமதி வழங்கிய பிறகே ஒளிக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்படும் என்று கூறினார்கள்.
அதாவது, வெறுமனே குறிப்பட்ட தொகையை செலுத்தினால் மட்டும் இந்த காட்சி அனுமதிக்கப்படுவதில்லை.
கனடா நாட்டின் நயாகரா பூங்கா கமிஷன் மற்றும் ஒளிக்காட்சி வாரியத்தின் கண்காணிப்பில் இந்த ஒளிக்காட்சி நடைபெறுகிறது.
கனடா நாட்டின் 150 பிறந்த நாள் சமீபத்தில் தான் கொண்டாடப்பட்டது. இந்தியாவின் 70 வது சுதந்திர தினத்தை கனடாவும் சிறப்பிக்கும் வகையில் இந்த மூவர்ண ஒளிக்காட்சி அமைந்துள்ளது.
கனடா பகுதியிலிருந்து ஒளிக்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும், அமெரிக்க பகுதியிலிருந்தும் இதைக் காண முடியும்.
நயாகராவுக்கு சென்றிருப்பவர்கள் தவறாமல் செவ்வாய் இரவு 10 மணிக்கு மூவர்ண ஒளிக்காட்சியை கண்டு இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடுங்கள்.
-இர தினகர்