சிங்கப்பூர்: லிட்டில் இந்தியா கலவர வழக்கில் மேலும் ஒரு இந்தியருக்கு 30 மாத சிறை
சிங்கப்பூர்: லிட்டில் இந்தியா பகுதியில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக மேலும் ஒரு இந்தியருக்கு 30 மாதம் சிறைதண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த டிசம்பர் 8ஆம்தேதி நடந்த ஒரு பேருந்து விபத்தில் தமிழர் ஒருவர் பலியானார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட கலவரத்தில் 43 பேர் காயம் அடைந்தனர். 24 வாகனங்கள் சேதம் அடைந்தன. இது தொடர்பாக இந்தியர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

விசாரணைக்கு பின் ஏற்கனவே சிலருக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் மற்ற நபர்களின் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அதில் பழனிவேல் மோகன்தாஸ் என்ற தமிழருக்கு ஒன்பது மாத கால சிறைதண்டனை விதித்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மேலும் ஒருவரான சாரங்கன் குமரன்(36) என்பவருக்கு 30 மாத சிறை தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இவருடன் சேர்த்து, லிட்டில் இந்தியா கலவரம் தொடர்பான வழக்கில் இதுவரை 14 இந்தியர்களுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 11 இந்தியர்கள் மீதான வழக்குகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications