விமானத்தில் பக்கத்து சீட் பெண் பயணிக்கு முத்தம்.. இந்தியருக்கு ஓராண்டு சிறை!
விமானத்தில் சக பயணிக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக இந்தியருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
லண்டன் : விமானத்தில் பயணித்தபோது பெண் பயணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது இங்கிலாந்து நீதிமன்றம்.
இந்தியாவை சேர்ந்தவர் 35 வயதான ஹர்தீப் சிங். இவர் கடந்த பிப்ரவரி மாதம், ஆறு மாத சுற்றுலா விசாவில் லண்டன் சென்றார். மும்பையில் இருந்து மான்சேஸ்டர் செல்லும் விமானத்தில் அவர் பயணித்தார்.

அப்போது அவரது பக்கத்து இருக்கையில் பெண் பயணி ஒருவர் அமர்ந்திருந்தார். முதலில் அவரிடம் ஹர்தீப் சிங் பேச்சு கொடுத்துள்ளார். ஆனால் அவரது ஆங்கிலம் சுமாராக இருந்ததால், அந்த பெண் பயணி ஹர்தீப்பிடம் தொடர்ந்து பேசவில்லை.
சிறிது நேரம் கழித்து அந்த பெண் உள்பட விமானத்தில் பயணித்த அனைவரும் உறங்கிவிட்டனர். விமானத்தின் விளக்கும் அணைக்கப்பட்டுவிட்டது. இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஹர்தீப் சிங், அந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
அந்த பெண் திடீரென விழித்தபோது, ஹர்தீப்பின் கைது அவரது உள்ளாடையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஹர்தீப்பின் கையை விலக்க அந்த பெண் முயற்சித்த போது, அவர் தொடர்ந்து முத்தம் கொடுத்திருக்கிறார். சுமார் 15 நிமிட போராட்டத்திற்கு பிறகு, ஹர்தீப் சிங்கிடம் இருந்து தப்பித்த அந்த பெண், விமானப் பணிப் பெண்களிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து, மான்சேஸ்டர் விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், ஹர்தீப் சிங்கை போலீசார் கைது செய்தனர். அவரை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மான்சேஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹர்தீப் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை விதிக்கப்பட்டது. மேலும், சிறையில் இருந்து ஹர்தீப் சிங் வெளியே வந்ததும், நாடு கடத்தப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications