அமெரிக்காவில் மகளின் திருமண ரிஷப்ஷனில் இருந்து மாயமான இந்தியர் பிணமாக கண்டுபிடிப்பு
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் நடந்த மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அன்று காணாமல் போன இந்தியர் ஏரியில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரசாத் மொபார்டி(55) என்பவரின் மகள் துர்கா மொபார்டி(29) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள வால்நட் குரோவ் பகுதியில் வசித்து வருகிறார். அவருக்கும் ராஜேஷ் கட்டா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருமணத்தை அடுத்து கடந்த 13ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்தில் கலந்து கொள்ள பிரசாத் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்கா சென்றார். திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அங்கிருந்து தனியாக நடந்து சென்றார். நடந்து சென்றவர் மாயமாகிவிட்டார்.
அவரை அவரது குடும்பத்தாரும், போலீசாரும் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஏரியில் பிரசாத் பிணமாக மிதந்ததை கடந்த திங்கட்கிழமை பார்த்த ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
போலீசார் வந்து பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரசாத் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்பத்தினர் கூறினர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக போலீசார் பிரசாத்தை 72 மணிநேரம் தேடிவிட்டு அவர் கிடைக்காததால் தேடலை நிறுத்திவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications