யு.கே.: பண விவகாரத்திற்காக மனைவி, மகள்களை கொலை செய்த இந்தியர்
லண்டன்: இங்கிலாந்தில் வசித்து வந்த இந்தியர் பண விவகாரம் தொடர்பாக தனது மனைவி மற்றும் இரட்டையர் மகள்களை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் ரெதிஷ் புல்லார்காட்டில் குஞ்சுன்னி(44). அவரது மனைவி சிகி பத்மநாபன்(37). அவர்களுக்கு நியா மற்றும் நேஹா(13) என்ற இரட்டையர்கள் இருந்தனர். கடந்த 2005ம் ஆண்டு ரெதிஷ் தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் குடியேறினார்.
சாட்வெல் ஹீத் பகுதியில் வசித்து வந்த அவர் சமையல் கலைஞராக பணியாற்றி வந்தார். அவர் கேரளாவில் வீடு கட்ட தனது மாமியாருக்கு பணம் அனுப்பி வந்துள்ளார். மாமியார் வீடு கட்டும் பணிக்காக வந்த பணத்தை கையாடியதாக ரெதிஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக ரெதிஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ரெதிஷ் தனது மனைவியை தாக்க பதிலுக்கு அவரும் கணவரை தாக்கியுள்ளார். இதையடுத்து அவர்கள் விவாகரத்து பெறுவது என்று முடிவு செய்தனர். இந்நிலையில் கடந்த மே மாதம் ரெதிஷ் தனது மனைவி மற்றும் மகள்களின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். அதன் பிறகு அவர் கிழக்கு லண்டனில் உள்ள நீர் தேக்கத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
என் மாமியார் ஏமாற்றி விட்டார் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் தான் பண விவகாரத்திற்காக ரெதிஷ் மனைவி, மகள்களை கொலை செய்தது தெரிய வந்தது.