குடும்பத்தில் பிரச்சினை... மகள்களுக்கு ஆசிட் கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தாய்
லண்டன்: குடும்பப் பிரச்சினை காரணமாக இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் தனது மகள்கள் இருவருக்கும் ஆசிட் கொடுத்து கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டன் ருஸ்லிப் பகுதியில் கணவரின் குடும்பத்தாரோடு வசித்து வந்தவர் இந்திய வம்சாவளிப் பெண் ஹீனா. இவருக்கு ஜாஸ்மின் (9), ப்ரிஷா (4) என இரு மகள்கள் இருந்தனர்.
மாமனார், மாமியாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்ததில் ஹீனாவிற்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவி இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மகள்கள் இருவருக்கும் ஆசிட் குடுத்து கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார் ஹீனா.
இத்துயர சம்பவம் குறித்து ஹீனாவின் கணவர் கல்பேஷ் கூறுகையில், 'நானும் ஹீனாவும் எங்கள் மகள்களோடு நிம்மதியாக வாழ்ந்தோம். அவள் இறப்பதற்கு முன்பு வரை அவள் மகிழ்ச்சியாக இருந்ததாகவே நான் எண்ணினேன்.
நாங்கள் என் பெற்றோருடன் வசித்து வந்தது ஹீனாவிற்கு பிடிக்காது என எனக்கு தெரியும். ஆனால், அவள் எப்போதும் தனது வாழ்வை முடித்துகொள்ளும் எண்ணத்தில் இருந்ததில்லை. இச்சம்பவம் எனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது' என கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
ஹீனாவின் தோழியான பிரனாலி சாம்பிரே கூறுகையில், ‘தனது மாமனார் கடுமையாக நடந்துகொள்வதாக முன்னர் ஒருமுறை ஹீனா தன்னிடம் கூறி கதறி அழுததாகவும், ஆனால் இப்படி தற்கொலை செய்து கொள்வார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அதிர்ச்சியுடன் கூறியுள்ளார்.