நேர்மையற்ற மீடியா... இந்தியப் பிரதமர் மோடி என்னை பாராட்டினார்... ட்ரம்ப் பெருமிதம்!!
நெவாடா: அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு அதிகமாக பரிசோதனை செய்த வகையில் என்னை இந்தியப் பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். முந்தைய ஆட்சியில் ஸ்வைன் புளூ வந்திருந்தபோது, மக்களை காப்பாற்ற தவறியவர்தான் ஜோ பைடன்'' என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பிரச்சாரங்கள் நடந்து வருகிறது. அந்த நாடு தற்போது எதிர்கொண்டு இருக்கும் தலையாய பிரச்சனை கொரோனா தொற்று. இந்த தொற்றுக்கு இன்னும் தடுப்பு மருந்தை அமெரிக்கா கண்டுபிடிக்கவில்லை. மனித பரிசோதனையில் உள்ளது. நவம்பர் முதல் வாரத்தில் அந்த நாட்டு மக்களுக்கு செலுத்தப்படும் என்று ட்ரம்ப் கூறி வருகிறார். கொரோனாவைத் தடுக்க போதிய நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுக்கவில்லை என்று பரவலான கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில் நெவாடாவில் இருக்கும் ரெனாவில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ட்ரம்ப் பேசுகையில், ''இந்தியா உள்பட மற்ற நாடுகளைவிட அமெரிக்காவில் கொரோனா பரிசோதனை அதிகமாக செய்யப்பட்டுள்ளது. பெரிய நாடுகள் மேற்கொண்ட பரிசோதனைகள் அனைத்தையும் ஒன்றிணைத்தாலும் அமெரிக்காவில் செய்த பரிசோதனை அளவிற்கு செய்து இருக்க முடியாது.
இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. அமெரிக்கா 44 மில்லியன் பரிசோதனைகளுடன் இந்தியாவை முந்தி முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் 150 கோடி மக்கள் உள்ளனர். இதற்காக என்னை இந்தியப் பிரதமர் மோடி தொடர்பு கொண்டு வெகுவாக பாராட்டினார். அப்போது அதிக பரிசோதனை மூலம் அபார சாதனை செய்து இருக்கிறீர்கள் என்றார். இந்தியப் பிரதமர் கூறியதை மீடியாக்களுக்கு அமெரிக்கா விளக்க வேண்டும்.
இன்று இந்தி தினம்.... பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து
இதை நான் இங்கு நேர்மை இல்லாதவர்களுக்கு (மீடியாவை மறைமுகமாக சாடினார்) குறிப்பிட வேண்டியது இருக்கிறது. சீன வைரஸ் பரவிய இந்த நேரத்தில் அதிகாரத்தில் பைடன் இருந்து இருந்தால், ஆயிரக்கணக்கில், கொத்து கொத்தாக அமெரிக்கர்கள் உயிரிழந்து இருப்பார்கள். துணை அதிபராக இருந்தபோது, நாடு மோசமான பொருளாதாரத்தை சந்தித்தது. அப்போது இருந்த பொருளாதாரத்தை நான் மீட்டுள்ளேன்.
Recommended Video
பைடன் ஆட்சியால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரம் நெவாடா. அதுமாதிரியான ஆள்தான் மீண்டும் உங்களுக்கு வேண்டுமா. கடந்த நான்கு ஆண்டுகளாக கடுமையாக உழைத்து பொருளாதாரத்தை மீட்டுள்ளேன். வேலை வாய்ப்பு அளித்துள்ளேன். எல்லைகளை பாதுகாத்துள்ளேன். ராணுவத்தை கட்டமைத்துள்ளேன். சீனாவை எதிர்கொண்டு நிற்கிறோம். சீனாவை நாம் எதிர்த்ததுபோல் முன்பு யாரும் எதிர்த்தது இல்லை'' என்றார்.