சிறார்களின் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக இந்திய பாதிரியார் அமெரிக்காவில் கைது
புளோரிடா: குழந்தைகளின் ஆபாசப் படங்களை வைத்திருந்ததாக அமெரிக்காவில் இந்திய பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்தவர் பாதிரியார் ஜோஸ் பாலிமட்டம். இவர் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியாராக இருந்து வந்தார். இந்நிலையில் தனது மொபைல் போனில் குழந்தைகள் பாலியல் படங்கள் வைத்திருந்த குற்றத்துக்காக அவரை போலீசார் கைது செய்தனர்.
தனது மொபைலில் இருந்த 40 பாலியல் படங்களை அழிக்க உதவுமாறு 14 வயது சிறுவனை பாதிரியார் வற்புறுத்தியுள்ளார். இதையடுத்து அந்த சிறுவன் போலீஸில் கூறி விட்டான். இதையடுத்து பாதிரியாரின் செயல் அம்பலமானது, அவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜோஸ் பாலிமட்டம் மீது, பாலியல் படங்கள் வைத்திருந்தது, அதனை சிறுவர்களுக்கு விநியோகித்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜோஸ் பாலிமட்டம், பால்ம் பீச் கவுன்டி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜோஸ் பாலிமட்டம் கடந்த டிசம்பர் மாதம்தான் இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு வந்திருந்தார். இவர் ஏற்கனவே இந்தியாவில் ஒரு சிறுவனிடம் தவறாக நடக்க முயன்று அங்கு கண்டிக்கப்பட்டவர் என்ற விவரமும் தெரிய வந்துள்ளது. இருப்பினும் இதுகுறித்து போலீஸில் புகார் தரப்படாமல் விட்டு விட்டனர் இந்திய சர்ச் அதிகாரிகள் என்றும் தெரிய வந்துள்ளது.
பாலிமட்டம் கேரளாவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.