மதம் கடந்த மனித நேய பணியில் இந்தியன் சோஷியல் ஃபோரம்!
ரியாத்: சவுதியில் பலியான செல்வக்குமார் என்பவரின் உடலை தமிழகத்தில் உள்ள அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளது இந்தியன் சோஷியல் ஃபோரம்.
சவுதி அரேபியா அல்ஹஸ்ஸாவில் பணிபுரிந்து வந்த திருச்சி மாவட்டம் பெரம்பலூரை சேர்ந்த செல்வகுமார்(35) என்பவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கடைக்கு சென்ற இடத்தில் தலை சுற்றி அருகில் உள்ள பிக்கப் வாகனம் மீது மோதி இறந்தார்.

இரண்டு மாதங்களாகியும் அவரது சடலம் ஊருக்கு அனுப்பப்படாமல் இருந்த தகவல் அறிந்து அல்ஹஸ்ஸா கிளை இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறை பிரிவை சேர்ந்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது உடனடியாக களமிறங்கினர்.
இறந்தவரின் ஸ்பான்சர் அப்துல்லாஹ் முகம்மது யூசுப் அல்சாஹர் அவர்களுடன் இணைந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து செல்வகுமாரின் சடலத்தை அவரது சொந்த ஊரான பெரம்பலூருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் மேற்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு அல்ஹஸ்ஸாவிலிருந்து சடலம் தம்மாம் விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு தம்மாமிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு லங்கா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் இன்று காலை 8.50 மணிக்கு திருச்சி வந்தடையும் என்ற தகவலையும் இறந்தவரின் ஊரை சேர்ந்த முத்துசாமி சுந்தர் என்பவர் மூலம் செல்வகுமாரின் குடும்பத்தாருக்கு சொல்லப்பட்டுவிட்டது.
இந்தியன் சோஷியல் ஃபோரம் சமூக நலத்துறையுடன் இணைந்து சவுதி அரேபியாவை சேர்ந்த அப்துல்லாஹ் முகம்மது யூசுப் அவர்கள் செல்வக்குமார் சடலத்தை ஊருக்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து செலவுகளையும் தாமே ஏற்றுக்கொண்டு விமான நிலையம் வரை சடலத்தை அனுப்பி வைக்க வந்த நிகழ்வு பாராட்டிற்குரியது.
இதே போல் கடந்த 9ம் தேதி பெரம்பலூர் விசுவகுடி கிராமத்தை சேர்ந்த ஜமால் முகம்மது(32)என்பவர் ரியாத் ஹைவே ரோட்டில் நிகழ்ந்த வாகன விபத்தில் பலியானார். 13ம் தேதி அவரது குடும்பத்தாரின் வேண்டுகோளை ஏற்று களமிறங்கிய ஜின்னா மற்றும் ரியாஸ் அகமது அதற்கான சட்ட நடவடிக்கை மேற்கொண்டு கடந்த 18ம் தேதி ஜமால் முகம்மதுவின் உடலை நல்லடக்கம் செய்தனர்.

இறந்தவர் மாற்று மதத்தை சேர்ந்தவர் என வேறுபாடு காணாமலும், மற்றொரு தமிழ் சகோதரர் ஜமால் முகம்மது அவர்களின் நல்லடக்க நிகழ்வுக்காகவும் தமது மூன்று நாள் சம்பளம் போனாலும் பரவாயில்லை மதம் கடந்த மனிதநேயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற சமூக அக்கறையுடன் கம்பெனியில் விடுப்பு எடுத்து தங்களது கடமையை செய்த நெல்லை ஜின்னா மற்றும் அதிரை ரியாஸ் அகமது ஆகியோரை இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத்தலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி மற்றும் மாநில பொதுச் செயலாளர் காயல் மக்தூம் நைனா, கிளைத் தலைவர் மயிலாடுதுறை நாசர், நாச்சிகுளம் யூசுப்கான் உள்ளிட்டோர் வாழ்த்தி பாராட்டினர்.












Click it and Unblock the Notifications