தமிழகத்தில் இருந்து புறப்பட்ட கர்ப்பிணி உட்பட 44 ஈழத் தமிழ் அகதிகள் இந்தோனேசிய கடலில் தத்தளிப்பு
ஜகர்தா: தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய புறப்பட்ட 44 ஈழத் தமிழ் அகதிகள் படகு கோளாறால் இந்தோனேசிய கடலில் தத்தளித்து வருகின்றனர்.
இலங்கை மற்றும் தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்கள் சட்டவிரோதமாக படகுகளில் புறப்பட்டு ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைய செல்வது தொடர் கதையாகி வருகிறது. தற்போது ஈழத் தமிழ் அகதிகள் 44 பேருடன் ஆஸ்திரேலியாவில் தஞ்சமடையும் நோக்கத்தில் தமிழகத்தில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று இந்தோனேசியக் கடற்பரப்பில் இயந்திரக் கோளாறால் தத்தளிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்திய தேசியக் கொடி மற்றும் தமிழ்நாடு பதிவு எண்ணைக் கொண்ட இப் படகு, ஒரு மாதத்துக்கு முன்னர் தமிழகத்தில் இருந்து ஆஸ்திரேலியா நோக்கிப் புறப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் இந்தோனேசியாவின் ஆச்சே மாகாண கடற்பகுதியில் இப் படகு தத்தளித்துக் கொண்டிருந்த போது உள்ளூர் மீனவர்கள் அந்நாட்டு அரசுக்கு தெரிவித்திருக்கின்றனர்.
இதனைத் தொடர்ந்து இந்தோனேசிய அதிகாரிகளும், இராணுவ அதிகாரிகளும் படகுக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் ஈழத் தமிழ் அகதிகளுக்கு உதவிப் பொருட்களையும் வழங்கியுள்ளனர்.
அப்படகில், 9 சிறுவர்கள் உட்பட 44 பேர் உள்ளனர். இவர்களில் ஒரு கர்ப்பிணி உட்பட 15 பேர் பெண்கள்.
ஆனால் இப்படகை இந்தோனேசியாவில் தரையிறங்க அனுமதிக்க முடியாது என்று கூறி சர்வதேச கடற்பரப்புக்குத் திருப்பி அனுப்ப அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் எங்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வையுங்கள் என படகில் இருந்த ஈழத் தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications