உஷார்.. இந்தியாவை பார்த்து கற்றுக்கோங்க.. பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு அந்த நாட்டு மாஜி தூதரே வார்னிங்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா இடைநிறுத்தியுள்ளது. இதனால் திக்குமுக்காடிப் போயுள்ள பாகிஸ்தான் அமைச்சர்கள், பொறுப்பற்ற முறையில் பேசி வருகின்றனர். சிலர் அணு குண்டு மிரட்டல் விடுக்கின்றனர், சிலர் ரத்த ஆறு ஓடும் என்று போருக்குச் சவால் விடுகின்றனர்.

சமீபத்தில் பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, 'எங்கள் ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவுக்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளன' என்று மிரட்டல் விடுத்தார்.

pakistan army kashmir

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூட இந்தியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 'இந்தியா எந்த நடவடிக்கையும் எடுத்தால் பாகிஸ்தான் போருக்குத் தயார்' என்றும், நீர் நிறுத்தம் ஒரு 'போர்ப் பிரகடனம்' ஆகக் கருதப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

"இந்தியாவைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்" - முன்னாள் தூதர் நக்கல்!

ஆனால், பாகிஸ்தான் அமைச்சர்களின் இந்த பேச்சுகளுக்கு அந்நாட்டின் முன்னாள் தூதரே கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான முன்னாள் தூதராக இருந்த அப்துல் பாசித், யூடியூபில் வெளியிட்ட ஒரு வீடியோவில், 'இந்த அமைச்சர்கள் தங்கள் எதிரியான இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்' என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "பஹல்காம் சம்பவத்திற்குப் பிறகு பாகிஸ்தானில் எல்லோரும் 'வீரர்கள்' ஆகிவிட்டனர். யார் வேண்டுமானாலும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தலாம்... எதிரி நாடாக கருதும் இந்தியாவிடம் இருந்து குறைந்தபட்சம் கற்றுக் கொள்ள வேண்டும்... அங்கே பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி ஊடக வெளிச்சம் தேடும் போட்டி இல்லை. அவர்கள் மிகவும் ஒழுங்கான முறையில் முன்னேறி, தங்கள் இலக்கை அடைய முயற்சிக்கிறார்கள்" என்றார்.

"நமது நாட்டில் இது ஒரு 'யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பேசலாம்' என்ற நிலை. இது மிகவும் தீவிரமான விஷயம், இதில் இந்தியா நிச்சயமாக சில நடவடிக்கைகளை எடுக்கும். இந்த நேரத்தில் நாம் எச்சரிக்கையுடன் பேசுவது அவசியம்" என்றும் பாசித் கூறினார்.

பாகிஸ்தானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் (க்வாஜா ஆசிஃப்) ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், அவரது உடல்மொழி சரியில்லை என்றும், அவர் தலைமுடியைச் சரிசெய்வதும், அங்கங்கே சொரிவதும் போன்ற செயல்களில் ஈடுபட்டார் என்றும், சரியான பதில்களைக் கூட அவர் அளிக்கவில்லை என்றும் பாசித் கடுமையாக விமர்சித்தார்.

ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸியை நேரடியாகச் சாடிய அப்துல் பாசித், "இந்த விஷயங்களுக்கும் ரயில்வே அமைச்சருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால், அவர் யாருடைய அனுமதியுடன் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார்? ஒருவேளை பிரதமரே (ஷெஹ்பாஸ் ஷெரீப்) அனுமதித்திருந்தால், இதுபோன்ற நெருக்கடி நிலையைக் கையாள்வது எப்படி என்று பிரதமருக்குத் தெரியவில்லை என்று அர்த்தம்" என்று கூறியுள்ளார். இதன் மூலம் பிரதமரின் தலைமையையும் அவர் மறைமுகமாகச் சாடியுள்ளார்.

ரயில்வே அமைச்சர் உளறல்

ராவல்பிண்டியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பாகிஸ்தானின் ரயில்வே அமைச்சர் ஹனீஃப் அப்பாஸி, அணு குண்டு மிரட்டல் விடுத்திருந்தார். அவர், "எங்கள் ஏவுகணைகள் அனைத்தும் இந்தியாவை நோக்கியே உள்ளன. இந்தியா எதையாவது செய்யத் துணிந்தால், அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும். உலகின் மிக சக்திவாய்ந்த அணு குண்டு எங்களிடம் உள்ளது. கோரி, ஷாஹீன், கஸ்னவி போன்ற ஏவுகணைகள் மற்றும் 130 அணு குண்டுகள் இந்தியாவுக்காக மட்டுமே உள்ளன" என்று உளறியிருந்தார். ஒரு ரயில்வே அமைச்சர் இதுபோன்ற விஷயங்களைப் பேசுவது பாகிஸ்தானின் நிலையின் அப்பட்டமான உதாரணமாக பார்க்கப்படுகிறது.

உள்துறை அமைச்சர் கூச்சல்

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வியின் பத்திரிகையாளர் சந்திப்பு தேவையற்றது என்றும் அப்துல் பாசித் சாடினார். பிரதமர் ஷெரீப், இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றும், ஒரு நடுநிலையான சர்வதேச விசாரணைக்குத் தயார் என்றும் உலகிற்கு ஒரு செய்தியை அனுப்பியிருந்தும், உள்துறை அமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி 'அபத்தமான விஷயங்களைப் பேசியுள்ளார்' என்றும் பாசித் கூறியுள்ளார்.

"சிந்து நதி நீரை நிறுத்துவதை பாகிஸ்தான் பொறுத்துக்கொள்ளாது, அது போர்ப் பிரகடனமாகவே கருதப்படும். இந்தியா ஒரு நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தான் போருக்குத் தயார்" என்று நக்வி கூறியிருந்தார்.

தனது வீடியோவின் முடிவில், அப்துல் பாசித், "இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே தற்போது மிகவும் தீவிரமான சூழ்நிலை உருவாகி வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்களை வெளியிட வேண்டும். இதன் மூலம் நமது அமைச்சர்கள் அவர்கள் பேசும் 'அபத்தத்திலிருந்து' காப்பாற்றப்படுவார்கள்" என்று கூறி முடித்தார். பாகிஸ்தானின் அமைச்சர்கள் இந்த அளவுக்குப் பொறுப்பற்றுப் பேசுவது அந்நாட்டின் தற்போதைய நிலையைக் காட்டுகிறது.

பிலாவல் பூட்டோ காமெடி மிரட்டல்

முன்னாள் வெளியுறவு அமைச்சரும், பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரியின் மகனுமான பிலாவல் பூட்டோவும் இந்தியாவிற்கு ஒரு மிரட்டலை விடுத்துள்ளார். சிந்து நதி நீர் ஒப்பந்த இடைநிறுத்தம் இந்தியாவின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார். "சிந்து நதி எங்களுடையது, எங்களுடையதாகவே இருக்கும். நமது தண்ணீர் சிந்துவில் பாயும் அல்லது அவர்களின் ரத்தம்" என்று அவர் கூறியுள்ளார். இந்த வெற்று மிரட்டல்கள் பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் திக்குமுக்காடிப் போயுள்ளதையே காட்டுகிறது.

பஹல்காம் தாக்குதல்

கடந்த செவ்வாய்க்கிழமை பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள் ஆவர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகள் பாகிஸ்தானுடன் தொடர்புடையவர்கள் என்று தெரியவந்ததையடுத்து, இந்தியா சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+