ஈரானில் கொடூரம்: பலாத்காரம் செய்ய வந்த நபரை கொன்றதற்காக தூக்கிலிடப்பட்ட இளம்பெண்
டெஹ்ரான்: தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவரை கொலை செய்த இளம்பெண்ணை ஈரான் அரசு தூக்கிலிட்டது.
ஈரானைச் சேர்ந்தவர் ரைஹானா ஜப்பாரி(26). கடந்த 2007ம் ஆண்டு அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வந்த நபரை கத்தியால் குத்திக் கொலை செய்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து ரைஹானாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ரைஹானாவுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
தற்காப்புக்காக தான் அந்த நபரை கத்தியால் குத்தியதாக ரைஹானா நீதிமன்றத்தில் பலமுறை கூறியதை யாருமே கேட்கவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை அதிகாலை வேளையில் ரைஹானா தூக்கிலிடப்பட்டார்.
அவரை தூக்கிலிட வேண்டாம் என்று சர்வதேச அமைப்புகள் பல கோரிக்கை விடுத்தும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ரைஹானாவை தூக்கிலிட்டதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் முன்னேற்றம் ஏற்படுத்துவேன் என கூறி ஆட்சிக்கு வந்த அதிபர் ஹஸன் ரூஹானிக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.