ஈரான் இஸ்ரேல் போர் LIVE: இஸ்ரேலுக்குள் நுழைய ஐநா பொதுச்செயலாளருக்கு அதிரடி தடை
தெஹ்ரான்: ஹமாஸ், ஹிஸ்புல்லா படைகளுக்கு ஆதரவாக ஈரான், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதால், மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தப் போர்ச் சூழல் காரணமாக மூன்றாவது உலகப் போர் ஏற்படுமோ என அஞ்சப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் களத்தில் குதித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி இஸ்ரேல் நகரங்களை குறிவைத்து ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக காசாவில் ஹமாஸ் தீவிரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. ஹமாஸ் படையினருக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள், இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து தொடர் தாக்குதல் நடத்தி வந்தனர்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா இடையே கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக தீவிர போர் நடைபெற்றது. இதில் லெபனானில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். இஸ்ரேலில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். கடந்த செப்டம்பர் 17 ஆம் தேதி ஹிஸ்புல்லா அமைப்பினர் பயன்படுத்திய 5,000-க்கும் மேற்பட்ட பேஜர்கள் வெடித்துச் சிதறின.
இதைத்தொடர்ந்து, தெற்கு லெபனான் எல்லை பகுதியில் தரைவழி தாக்குதலை தொடங்கி உள்ளது இஸ்ரேல். 100-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் பீரங்கிகள் லெபனான் நாட்டு எல்லைக்குள் நுழைந்து, ஹிஸ்புல்லா முகாம்களை தரைமட்டமாக்கி வருகின்றன. தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹிஸ்புல்லாவின் ஆயுத கிடங்குகளை குறிவைத்து போர் விமானங்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
ஹமாஸ், ஹிஸ்புல்லா ஆகிய தமது ஆதரவு அமைப்புகள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை பொறுக்க முடியாமல் இஸ்ரேல் மீது ஈரான் பதில் தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை ஏவியுள்ளது ஈரான். இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்கா கடற்படையினர் நடுவானில் தடுத்து அழித்தனர். மத்திய கிழக்கில் தாக்குதல் தொடர்வதால் உலக அளவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புத் துறை அதிகாரிகளுடன் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது, அதற்கான விலையை கொடுத்தாக வேண்டும் என தெரிவித்துள்ளார். எத்தகைய தாக்குதலையும் எதிர்கொள்வோம் என ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதிலடி கொடுத்துள்ளார். இதனால் மேற்கு ஆசிய நாடுகளில் போர் பதற்றம் தீவிரம் அடைந்துள்ளது.
இஸ்ரேல் - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள இந்த பயங்கர மோதலுக்கு ஐ.நா சபை பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு மோதல்கள் தீவிரமடைவதை கண்டிக்கிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications