"போருக்கு தயார்.." ஈரான்- இஸ்ரேல் இடையே உச்சக்கட்ட பதற்றம்! உலகம் தாங்காது! தகிக்கும் மத்திய கிழக்கு
தெஹ்ரான்: மத்திய கிழக்கில் இப்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இஸ்ரேல்- ஈரான் இடையே எப்போது வேண்டுமானாலும் போர் ஏற்படலாம் என்ற சூழலே நிலவி வருகிறது. இந்தச் சூழலில் போர் குறித்து ஈரான் கூறியுள்ள கருத்துகள் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே நேரடியாகப் போர் வெடித்தால் பாதிப்புகள் மோசமாக இருக்கும் என்பதால் உலக நாடுகளும் நிலைமையைக் கவனித்து வருகிறது.
இஸ்ரேல்- ஹமாஸ் இடையே கடந்தாண்டு தொடங்கிய போர் இப்போது பிராந்திய போராக மாறியுள்ளது. முதலில் ஹமாஸ் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹிஸ்புல்லா படை இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

ஈரான் ஆத்திரம்: இதனால் லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற இந்த ஹிஸ்புல்லா படை மீதும் இஸ்ரேல் தனது குறிப்பாக ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானை ஆத்திரப்படுத்தியது. இதையடுத்து இம்மாத தொடக்கத்தில் இஸ்ரேல் மீது ஈரான் சரமாரி ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில் பெரியளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கூட இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதற்குப் பதிலடி யாரும் எதிர்பார்க்காத வகையில் அதேநேரம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் இருக்கும் என்று இஸ்ரேல் மிரட்டல் விடுத்திருந்தது. தொடர்ந்து சில நாட்களில் ஈரானில் மிகப் பெரிய ஒரு சைபர் தாக்குதல் நடந்ததாகத் தகவல் வெளியானது. ஈரான் நாட்டின் எல்லா துறைகளும் இந்த சைபர் தாக்குதலால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
எச்சரிக்கை: இந்தச் சூழலில் ஈரான் மீண்டும் மிக முக்கியமான ஒரு எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதாவது தங்களையும் தங்கள் மக்களையும் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்வோம் என்றும் இதில் ரெட் லைன் எதையும் பின்பற்றப் போவதில்லை என்றும் ஈரானின் வெளியுறவு மந்திரி அப்பாஸ் அராச்சி தெரிவித்துள்ளார். மேலும், தங்களைத் தாக்க நடத்தத் திட்டமிடுவோருக்குப் பதிலடி தரப்படும் என்றும் எச்சரித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "இதுவரை இல்லாத அளவுக்கு இஸ்ரேலுக்கு மிகப் பெரியளவில் ஆயுதங்களை வழங்கி அமெரிக்கா உதவி வருகிறது. எங்கள் பிராந்தியத்தில் போர் ஏற்படாமல் இருக்க நாங்கள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆனால், எங்கள் மக்களை பாதுகாப்பதில் எங்களுக்கு எந்த ரெட் லைனும் இல்லை. எந்த எல்லைக்கும் செல்வோம்.
போருக்குத் தயார்: நாங்கள் போரை விரும்பவில்லை.. அதேநேரம் முழு வீச்சில் போர் தொடங்கினால் அதை எதிர்கொள்ளவும் தயாராகவே இருக்கிறோம்" என்று திட்டவட்டமாகக் கூறினார். அங்கு ஏற்கனவே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், ஈரான் அமைச்சரின் இந்தக் கருத்து முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
ஐநா பாதுகாப்பு கவன்சில்: முன்னதாக கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஈரானின் நிரந்தர பிரதிநிதி அமீர் சயீத் இரவானி, "எங்கள் பாதுகாப்பு எங்களுக்கு முக்கியம். ஈரான் இறையாண்மையில் தலையிட்டு, பிராந்திய ஒருமைப்பாட்டைச் சீர்குலைக்க முயல்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் போரைத் தொடங்கவில்லை. அதேநேரம் சர்வதேச சட்டத்தின் கீழ் எங்களைப் பாதுகாக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது" என்று கூறியிருந்தார்.ட
இஸ்ரேல்- ஈரான் இடையே இதுவரை நேரடியாகப் போர் வெடிக்கவில்லை. ஆனால், ஒருவேலை இரு தரப்பிற்கும் இடையே போர் வெடித்தால் அது சர்வதேச அளவில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உலக நாடுகள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications