அமெரிக்கா உதவியுடன் மொசூல் அணையை மீட்டது குர்திஷ் படை! ஒபாமா வாழ்த்து!!
மொசூல்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசம் இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசூல் அணையை அமெரிக்காவின் உதவியுடன் குர்திஷ் படையினர் மீட்டுள்ளனர்.
ஈராக்கில் யாஸிதி சிறுபான்மையினரை அகதிகளாக விரட்டியடித்தது ஐ.எஸ்.ஐ.எஸ்.இயக்கம். இதனால் சிஞ்சார் மலைக்குன்றுகளில் பசியும் பட்டினியுமாக கொத்து கொத்தாக ஆயிரக்கணக்கில் யாஸிதிகள் செத்து மடிந்தனர்.
அத்துடன் சிஞ்சார் மலைக்குன்றுகளில் மனிதப் பேரவலம் நிகழப்போவதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது. இதனைத் தொடர்ந்து சிஞ்சார் மலைக்குன்றுகளில் ஐ.எஸ்.ஐ.எஸ். முற்றுகையில் சிக்கித் தவிக்கும் யாஸிதி இனத்தவரை மீட்க அமெரிக்கா களமிறங்கியது.
அமெரிக்கா போர் விமானங்கள் தொடர்ந்து ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தினரின் நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது. 10 நாட்கள் தாக்குதலுக்குப் பின்னர் யாஸிதிகள் மலைக்குன்றுகளில் இருந்து குர்திஷ் மாகாணங்களுக்கு வந்தடைந்தனர்.
இந்த நிலையில் குர்திஷ் மாகாணத்தை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தினர் கைப்பற்றுவதைத் தடுக்கும் வகையில் தொடர்ந்தும் அமெரிக்கா தாக்குதலை நடத்தி வந்தது. இதன் முக்கிய கட்டமாக ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கம் வசம் இருந்த கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மொசூல் அணைக்கட்டை குர்திஷ் மாகாண அரசு படைகள் கைப்பற்றியுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்கா அதிபர் ஒபாமா, மொசூல் அணைக்கட்டை மீட்டிருப்பது மிக முக்கியமான முன்னேற்றம். மொசூல் அணைக்கட்டை மீட்டிருப்பதற்கு வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.