ராணுவ தளபதி முனீருக்கு முடிசூட்டு விழா? ஆபத்தான திசையில் செல்லும் பாகிஸ்தான்! அதிர வைக்கும் தகவல்
இஸ்லாமாபாத்: கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் ராணுவத் தளபதி முனீருக்கு கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கும் வகையில் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டது. இந்தச் சட்டம் மாற்றி அமைக்கப்பட என்ன காரணம்.. இதனால் பாகிஸ்தானில் என்ன மாதிரியான ஒரு சூழல் உருவாகும் என்பது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
இந்தியா பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் மோதல் வெடித்தபோது, இந்தியா கொடுத்த பதிலடியை பாகிஸ்தானால் சமாளிக்க முடியவில்லை. அந்நாட்டின் ராணுவத் தளபதியான அசிம் முனீர் திட்டங்கள் எல்லாம் தோற்றுப் போனது. இருப்பினும், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஓட்டவில்லை என்ற கதையாக அசிம் முனீருக்கு பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு தரப்பட்டது.

ஆபத்து
இதற்கிடையே பாகிஸ்தான் இப்போது மற்றொரு ஒரு அபாயகரமான மாற்றத்தின் விளிம்பில் உள்ளது. அங்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்ட 27வது அரசியலமைப்புத் திருத்தம், பாகிஸ்தானின் அதிகாரச் சமநிலையை நிரந்தரமாக மாற்றக்கூடும். அந்நாட்டின் ராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் அசிம் முனீர் தான் இதன் மையத்தில் இருக்கிறார்.
இந்தச் சட்டத் திருத்தம் முனீருக்கு கூடுதல் அதிகாரத்தைக் கொடுக்கிறது. மேலும், வாழ்நாள் முழுக்க அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க முடியாத சட்டப் பாதுகாப்பையும் கொடுக்கிறது. அனைத்து ஆயுதப் படைகளின் மீதான கட்டுப்பாட்டையும், முக்கியமாக பாகிஸ்தானின் அணு ஆயுதங்கள் மீதான அதிகாரத்தையும் வழங்கும். பாகிஸ்தானைப் போன்ற நிலையற்ற நாட்டில் இந்த மாற்றங்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது.
முடிசூட்டு விழா
இது வெறும் சட்டச் சீர்திருத்தம் மட்டுமில்லை.. இது கிட்டத்தட்ட ஒரு முடிசூட்டு விழா என்றே சொல்லலாம்.. முனீரை ராணுவத் தளபதியிலிருந்து ஒரு மன்னராக மாற்றும் சட்டம்.. ராணுவ சீருடைக்குப் பதிலாக அவருக்கு மகுடத்தையும் மன்னரின் வாளையும் கொடுப்பதற்கு இணையான சட்டமாகவே இது இருக்கிறது. பாகிஸ்தானின் கடந்த காலத்தைப் பார்த்தால் இது எந்தளவுக்கு ஆபத்தானது என்பது புரியும்.
முனீரின் பிளான்
அங்கு அதிகாரத்தைக் கைப்பற்றப் பல ஜெனரல்களால் முயன்றுள்ளனர். அயூப் கான், ஜியா-உல்-ஹக் மற்றும் பர்வேஸ் முஷாரப் என அனைவரும் ராணுவம் மூலமாகவே ஆட்சியைப் பிடித்தனர். ஆனால், அவர்களாலும் கூட நாட்டை வழிநடத்த முடியாமல் போகவே அந்த அரசுகளும் கவிழ்ந்தன. முனீர் அவர்களின் தோல்விகளில் இருந்து கற்றுக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால் அவர் ராணுவச் சட்டத்தின் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்குப் பதிலாக, அரசியலமைப்பையே பயன்படுத்தி ராணுவ ஆதிக்கத்தைச் சட்டப்பூர்வமாக மாற்ற முயல்கிறார்.
உலக நாடுகள்
இதற்கிடையே பாகிஸ்தானில் அணு மற்றும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனைகள் ரகசியமாக நடத்தப்படுவதாக வெளியான தகவல்களும் சர்வதேச அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கூட இது தொடர்பாகப் பேசியிருந்தார். பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் சீனா அணு ஆயுதங்களைச் சோதித்து வருவதாக டிரம்ப் கூறியிருந்தார்..
பாகிஸ்தானில் நடக்கும் மாற்றங்களை இந்தியா உற்றுக் கவனித்து வருகிறது. அரசியலமைப்பு மற்றும் அணு ஆயுதங்கள் மீதான முனீரின் கட்டுப்பாடு, அங்கு மக்களாட்சியின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துகிறது.. இதனால் அங்குக் குழப்பமான சூழலும், பிராந்தியப் பதற்றங்களும் ஏற்படுகிறது.
பாகிஸ்தானில் அச்சம்
முனீரின் நடவடிக்கை பாகிஸ்தானின் அரசியலை மாற்றியமைக்கிறது. இந்தச் சட்டத் திருத்தம் ஜனநாயகத்தை அச்சுறுத்துகிறது என்று அங்குள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், அதையெல்லாம் அங்குள்ள ஆளும் கட்சி கவனிப்பதாகத் தெரியவில்லை. பாகிஸ்தானில் கடந்த காலங்களில் இருந்த ராணுவத் தளபதிகளை விட முனீருக்கு அதிகாரம் குவிந்துள்ளது. இதனால் வரும் காலத்தில் மிகப் பெரிய ஆபத்து ஏற்படலாம் என்றே உலக நாடுகள் கருதுகின்றன.












Click it and Unblock the Notifications